1.8 லட்ச மாருதி கார்களில் பிரச்சனை!! உங்களது மாருதி காரிலும் இந்த பிரச்சனை உள்ளதா? இலவசமாக மாற்றி தரப்படும்
சில காரணங்களுக்காக சுமார் 1.8 லட்ச பெட்ரோல் வாகனங்களை திரும்ப அழைப்பதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை இனி தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி விற்கப்பட்ட 1,81,754 பெட்ரோல் கார்களை திரும்ப அழைக்கிறது. இதில் சியாஸ், எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-க்ராஸ் மற்றும் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்ற எக்ஸ்.எல்6 உள்ளிட்ட மாடல்கள் அடங்குகின்றன.

இவற்றில் 2018 மே மாதம் 4ஆம் தேதியில் இருந்து, 2020 அக்டோபர் 27ஆம் தேதி வரையில் தயாரிக்கப்பட்ட மாதிரிகளில் மோட்டார் ஜெனரேட்டர் பகுதியில் பிரச்சனைகள் உள்ளதை மாருதி சுஸுகி நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் இந்த பிரச்சனை இருக்குமா என்பது உறுதியாக தெரியாவிட்டாலும், இந்த காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட அனைத்து கார்களையும் மாருதி நிறுவனம் திரும்ப அழைக்கிறது.

மேலும் 2018 மே மாதத்தில் இருந்து 2020 அக்டோபர் மாதம் வரையில் தயாரிக்கப்பட்ட மேற்கூறப்பட்ட மாருதி கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது காரை எலக்ட்ரிக் பாகங்கள் நனைய வாய்ப்புள்ள நீர் தேங்கிய பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட தங்களது கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களை கண்டறிந்து, இந்த திரும்ப அழைப்பு குறித்து மாருதி நிறுவனம் தெரிவித்து வருகிறது. தங்களது மாருதி காரும் இந்த திரும்ப அழைப்பு நடவடிக்கையில் உட்படுகிறதா என்பதை எந்தவொரு மாருதி கார் வாடிக்கையாளரும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் பரிசோதித்து கொள்ளலாம்.

மாருதி சுஸுகியின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்தில் 'Imp Customer Info' பிரிவில் இதற்கான விடையினை தெரிந்து கொள்ளலாம். இதற்கு வாடிக்கையாளர் தனது காரின் சேசிஸ் எண்ணை வெப்சைட்டில் குறிப்பிட வேண்டியதாக இருக்கும்.

இந்த திரும்ப அழைக்கப்படும் மாருதி கார்களில் பழுதுப்பார்ப்பு பணிகள் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து துவங்கவுள்ளதாகவும், இந்த பழுது பார்ப்பிற்கு வாடிக்கையாளர் எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை எனவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கார்கள் தயாரிப்பில் எதிர்பாராத விதமாக நடைபெறும் பிரச்சனைகளை பார்த்து கொண்டு எப்போதும் மாருதி சுஸுகி நிறுவனம் அமைதியாக இருந்ததில்லை. இதேபோன்று கடந்த ஆண்டு நவம்பரில் ஹெட்லைட் பகுதியில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சுமார் 40,453 ஈக்கோ கார்களை திரும்ப அழைத்திருந்தது.

அதன்பின் கடந்த ஜூலை மாதத்தில் எரிபொருள் குழாயில் உருவாக வாய்ப்புள்ள பிரச்சனையை முன்னரே கண்டறிந்ததினால் கிட்டத்தட்ட 1,34,885 வேகன்ஆர் மற்றும் பலேனோ ஹேட்ச்பேக் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் திரும்ப அழைத்தது.

கார்களை ரோபோக்கள் உருவாக்கும் காலத்திற்கு இன்னும் நாம் நீண்ட தூரத்திற்கு பயணிக்க வேண்டும். தற்போதைக்கு வாகனங்களை மிஷன்கள் மூலமாக மனிதர்கள்தான் தயாரித்து வருகின்றனர். இதனால் 'Human Error' எனப்படும் மனிதனால் ஏற்படும் சிறு சிறு பிழைகளை தவிர்ப்பது என்பது முடியாத காரியம்.

இவ்வாறான பிரச்சனைகள் இப்போது அல்ல, முதன்முறையாக கார்களை உருவாக்க துவங்கியதில் இருந்தே இத்தகைய பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்ப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் முந்தைய காலங்களில் (25- 30 வருடங்களுக்கு முன்பு) இவ்வாறு விற்கப்பட்ட கார்கள் சில காரணங்களினால் மீண்டும் திரும்ப அழைப்பட்டதில்லை.

ஏனெனில் இது தயாரிக்கும் நிறுவனத்தின் தரத்தின் மீது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திவிடக்கூடும். ஆனால் இப்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் பிரச்சனையை சொல்லாமல் மூடி மறைப்பதை விட, ஆம் நாங்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டோம், அதனை நாங்களே சரிச்செய்துவிடுகிறோம் என கூறிவிடுவது தான் நல்லது என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நினைக்கின்றன.


Click it and Unblock the Notifications








