நாட்டின் மூலை முடுக்குகளிலும் மாருதி சர்வீஸ் மையங்கள்... எண்ணிக்கை 4,000ஐ கடந்தது!
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி தொடர்ந்து தனது டீலர் மற்றும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதனால், அந்நிறுவனத்தின் டீலர் மற்றும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கை 4,000ஐ கடந்துள்ளது. இதன்மூலமாக, வேறு எந்த நிறுவனமும் தொட முடியாத அளவுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவை வழங்கும் நிறுவனமாக மாருதி மாறி இருக்கிறது.

2020 மற்றும் 2021ம் ஆண்டு இதுவரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 208 புதிய சர்வீஸ் மையங்களை திறந்துள்ளது. நாடுமுழுவதும் 1,989 நகரங்களில் மாருதி நிறுவனத்தின் சர்வீஸ் மையங்கள் அமைந்துள்ளன. இது நிச்சயம் மிகப்பெரிய சர்வீஸ் நெட்வொர்க்காக குறிப்பிட முடியும். இதன்மூலமாக, மாருதி கார் வாடிக்கையாளர்கள் மிக நெருக்கமான சேவையை பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுதவிர்த்து, வீட்டிலேயே கார்களை சர்வீஸ் செய்து தரும் திட்டத்தையும் மாருதி வழங்குகிறது. இதற்காக, 124 பகுதிகளில் 200 சர்வீஸ் ஆன் வீல்ஸ் என்ற நடமாடும் வாகனம் மூலமாக கார்களின் பராமரிப்புப் பணிகளை வழங்குவதாக மாருதி தெரிவித்துள்ளது.

மேலும், மாருதியின் 'குயிக் ரெஸ்பான்ஸ் டீம்' என்ற விரைவு சேவை குழுவினர் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் 1.14 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த விரைவு சர்வீஸ் திட்டத்தின் மூலமாக சேவையை பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் அவசர கால சேவைக்காக 780 வாகனங்களை மாருதி சுஸுகி பயன்படுத்துகிறது. இதில், நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் மூலமாக சேவை வழங்கப்படுகிறது. இந்த வாகனங்கள் பழுது நீக்குவதற்கான உரிய உபகரணங்களை கொண்டதாக இருக்கின்றன.

பெருநகரங்கள் தவிர்த்து, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை நகரங்களிலும் மாருதி சுஸுகி கார் நிறுவனத்தின் சர்வீஸ் மையங்கள் செயல்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை பெறும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

இதுதவிர்த்து, கார்களின் பழுதுநீக்கும் பணிகள் குறித்த செலவீனம் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் சேவைகளை வழங்குவதாக மாருதி தெரிவிக்கிறது. செலவீனத்திற்கு வாடிக்கையாளர் ஒப்புதல் கிடைத்த பின்னரே செய்யப்படுவதாகவும், அனைத்து விஷயங்களும் எஸ்எம்எஸ் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக தகவல் பரிமாறிக் கொள்ளப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








