கொரோனா கோரத்தாண்டவம்... மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக கார் ஆலைகளை தற்காலிகமாக மூடுகிறது மாருதி!
மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்வதற்காக தனது கார் ஆலைகளை தற்காலிகமாக மூட உள்ளதாக மாருதி சுஸுகி அறிவித்துள்ளது. குஜராத்தில் உள்ள சுஸுகி கார் உற்பத்தி ஆலையும் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாம் அலை மிக மோசமான நிலையை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் மிக மோசமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ஆக்சிஜன் கிடைக்காமல் பல கொரோனா நோயாளிகள் இறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரிசெய்வதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளது. பல தனியார் நிறுவனங்களுக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்காக தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றன.

அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி தனது கார் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"வரும் ஜூன் மாதம் வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக ஆலையை மூடுவதற்கு முடிவு செய்திருந்தோம். ஆனால், தற்போது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு எங்களது கார் ஆலைகளை முன்கூட்டியே மூடுவதற்கு முடிவு செய்துள்ளோம்.

ஜூனுக்கு பதிலாக, வரும் மே 1 முதல் 9ந் தேதி வரை எங்களது கார் ஆலைகளை மூட முடிவு செய்துள்ளோம். கார் உற்பத்திக்கு குறிப்பிட்ட அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கட்டமைப்பு உள்ளது. தற்போது மனித உயிர்களை காப்பதற்குத்தான் அந்த ஆக்சிஜனை பயன்படுத்த வேண்டும்.

எனவே, வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக கார் ஆலைகளை மூடி, அந்த சமயத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்," என்று தெரிவித்துள்ளது.

மேலும், குஜராத்தில் உள்ள சுஸுகி கார் ஆலையும் மே 1 முதல் மே 9ந் தேதி வரை மூடப்பட உள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனும் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட உள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து வருவதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதற்காக, மத்திய, மாநில அரசுகளும், தனியார் அமைப்புகளும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.


Click it and Unblock the Notifications








