விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி சுஸுகி சூப்பர் கேரி கமர்ஷியல் வாகனம்... என்னனு தெரியுமா?
மாருதி சுஸுகி சூப்பர் கேரி விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான இலகு ரக வர்த்தக வாகனங்களில் ஒன்று சூப்பர் கேரி (Maruti Suzuki Super Carry). இது சப்-1 டன் இலகு ரக வர்த்தக வாகனம் ஆகும். மாருதி சுஸுகி சூப்பர் கேரி தற்போது விற்பனையில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இந்திய சந்தையில் 1 லட்சத்திற்கும் அதிகமான மாருதி சுஸுகி சூப்பர் கேரி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதுதான் அந்த புதிய விற்பனை மைல்கல் ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வெறும் 5 ஆண்டுகளில் மாருதி சுஸுகி சூப்பர் கேரி இந்த மைல்கல்லை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி சூப்பர் கேரி வாகனம் முதல் முறையாக கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளில் மாருதி சுஸுகி சூப்பர் கேரி வாகனம் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள 335க்கும் மேற்பட்ட மாருதி சுஸுகி நிறுவனத்தின் கமர்ஷியல் அவுட்லெட்கள் வாயிலாக சூப்பர் கேரி வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாருதி சுஸுகி சூப்பர் கேரி வாகனம் இந்தியாவில் வெற்றியடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குனர் (மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ்) சஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ''மினி டிரக்குகள் சக்தி வாய்ந்தவை, ஓட்டுவதற்கு சௌகரியமானவை, பராமரிக்க எளிமையானவை, உரிமையாளர்களுக்கு லாபம் தரக்கூடியவை என்பதை மாருதி சுஸுகி சூப்பர் கேரி நிரூபித்துள்ளது.

எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு நன்றி. இலகு ரக வர்த்தக வாகன செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் மினி டிரக்குகளில் ஒன்றாக மாருதி சுஸுகி சூப்பர் கேரியை மாற்றியமைக்காகவும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்'' என்றார். இந்த செக்மெண்ட்டில் பிஎஸ்-6 இன்ஜினை பெற்ற முதல் இலகு ரக வர்த்தக வாகனம் என்ற பெருமை மாருதி சுஸுகி சூப்பர் கேரிக்கு உண்டு.

மேலும் 5 லிட்டர் பெட்ரோல் டேங்க்குடன் ட்யூயல் ஃப்யூயல் எஸ்-சிஎன்ஜி வேரியண்ட்டையும் மாருதி சுஸுகி சூப்பர் கேரி பெற்றுள்ளது. இதன் பெட்ரோல் வேரியண்ட்டில், 1.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணக்கமான இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72.4 பிஹெச்பி பவரையும், 98 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

அதே நேரத்தில் சிஎன்ஜி வெர்ஷன் அதிகபட்சமாக 64.3 பிஹெச்பி பவரையும், 85 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இவை இரண்டுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் கிடைக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனம் வரும் காலங்களில் இந்திய சந்தையில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில் புதிய தலைமுறை செலிரியோ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்து கொண்டே வருவதையடுத்து, மாருதி சுஸுகி நிறுவனம் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications








