மாருதி எக்ஸ்எல்6 காரின் விற்பனை எகிறியது... எவ்வளவு சதவீதம் உயர்ந்துள்ளது என தெரிந்தால் அசந்திருவீங்க
மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 பிரீமியம் எம்பிவி காரின் விற்பனை உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஆட்டோமொபைல் துறை தள்ளாடி போனது. ஆனால் பண்டிகை காலத்திற்கு பின் வாகன விற்பனை உயர தொடங்கியது. நடப்பாண்டும் அது தொடர்கிறது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் இந்திய சந்தையில் எம்பிவி கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது.

இந்த வகையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரீமியம் எம்பிவி காரான எக்ஸ்எல்6 கடந்த ஜனவரி மாதம் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 3,119 எக்ஸ்எல்6 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 305.06 சதவீத வளர்ச்சியாகும்.

ஏனெனில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் வெறும் 770 எக்ஸ்எல்6 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் விற்பனையில் வெறும் 1 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது. 2020ம் ஆண்டு டிசம்பரில் மாருதி சுஸுகி விற்பனை செய்த எக்ஸ்எல்6 கார்களின் எண்ணிக்கை 3,088.

உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால், அதனை ஈடுகட்டும் விதமாக மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தனது கார்களின் விலைகளை உயர்த்தியது. எக்ஸ்எல்6 காரை பொறுத்தவரை மேனுவல் வேரியண்ட்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களின் விலை 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்தது.

ஆனால் இந்த விலை உயர்வு வரும் மாதங்களில் எக்ஸ்எல்6 கார்களின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனெனில் பெரும்பாலான கார் உற்பத்தி நிறுவனங்கள் இதே பாணியில் விலையை உயர்த்தியுள்ளன. மாருதி சுஸுகி நிறுவனம் வரும் காலத்தில் புதிய எம்பிவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு வருகிறது.

எக்ஸ்எல்6 காருக்கு மேலாக இந்த புதிய எம்பிவி கார் நிலை நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் மஹிந்திரா மராஸ்ஸோதான் இதன் முக்கியமான போட்டியாளராக இருக்கும். இந்த புதிய எம்பிவி காரானது, டொயோட்டா நிறுவனத்துடனான கூட்டணியில் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே டொயோட்டா நிறுவனமும் இந்த காரை ரீபேட்ஜ் செய்து, தங்களது பிராண்டில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி விற்பனை செய்யப்படும் பட்சத்தில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காருக்கு கீழாக இந்த புதிய எம்பிவி கார் நிலைநிறுத்தப்படலாம். டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே மாருதி சுஸுகி கார்களை ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது.

தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள டொயோட்டா க்ளான்சா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய இரண்டு கார்களும் முறையே மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








