மாருதி - டொயோட்டா கூட்டணியில் புதிய க்ராஸ்ஓவர் ரக கார்
மாருதி - டொயோட்டா கூட்டணியில் புதிய க்ராஸ்ஓவர் கார் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய கார் குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் கார் உருவாக்கத்திற்கான முதலீடுகளை குறைத்து லாபத்தை அதிகரிக்கும் வகையில், மாருதி சுஸுகி - டொயோட்டா நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. மாருதி நிறுவனத்தின் பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா மாடல்கள் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் சிறிய மாற்றங்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், இந்த கூட்டணியில் அடுத்து பல புதிய மாடல்களை உருவாக்கி விற்பனை செய்யும் முயற்சிகளில் இரு நிறுவனங்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு புதிய கார் மாடலை இந்த கூட்டணி உருவாக்கி வருவது குறித்த செய்தி டீம் பிஎச்பி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

மாருதி சுஸுகி - டொயோட்டா கூட்டணியில் உருவாக்கப்பட்டு வரும் புதிய க்ராஸ்ஓவர் மாடலானது D-22 என்ற குறியீட்டுப் பெயரில் தயாரிக்கப்படுகிறது. இந்த மாடலானது க்ராஸ்ஓவர் ரகத்திலான வடிவமைப்பை பெற்றிருக்கும்.

அதாவது, செடான் அம்சங்கள் கொண்ட எஸ்யூவி கார் மாடலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதன்மூலமாக, சிறந்த ஓட்டுதல் தரம், சொகுசான பயணத்தை இந்த க்ராஸ்ஓவர் மாடல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி - டொயோட்டா கூட்டணியின் புதிய க்ராஸ்ஓவர் கார் மாடலானது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எஞ்சின் தேர்வுகள் குறித்த விபரங்கள் இதுவரை தெரியவில்லை. இந்த கார் பெங்களூர் அருகே பிடதியில் செயல்பட்டு வரும் டொயோட்டா கார் ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.

அதேநேரத்தில், இந்த காருக்கான உதிரிபாகங்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தின் சப்ளையர்களிடம் இருந்து பெறப்படும் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது. இதனால், மிக சரியான விலையில் இந்த புதிய மாடலை கொண்டு வருவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

இதுதவிர்த்து, YTB என்ற குறியீட்டுப் பெயரில் புதிய காம்பேக்ட் க்ராஸ்ஓவர் மாடலையும் மாருதி சுஸுகி நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த கார் பலேனோ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








