மெர்சிடிஸ் இக்யுசி எலக்ட்ரிக் காரை வாங்க முடியலேயே என்ற கவலை வேண்டாம்!! அடுத்த தொகுப்பு செப்டம்பரில் வருகிறது
அடுத்த தொகுப்பு மெர்சிடிஸ் இக்யுசி எனப்படும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் வருகிற செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் கடந்த 2020ஆம் இறுதியில் இக்யுசி காரை அறிமுகப்படுத்தியதில் இருந்து தற்போதுவரையில் அதனால் கிடைத்துவரும் பலன்களை அனுபவித்து வருகிறது.

ஏனெனில் இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகப்படுத்திய முதல் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனம் மெர்சிடிஸ் ஆகும். அறிமுகத்திற்கு பிறகு சிபியூ முறையில், அதாவது முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

மெர்சிடிஸின் முதல் இந்திய எலக்ட்ரிக் கார் என்கிற அடையாளத்துடன் விற்பனை செய்யப்பட்ட இக்யுசி மாடலுக்கு எதிர்பார்த்ததை போலவே நல்ல வரவேற்பு கிடைக்க, முதல் தொகுப்பு கார்கள் மிக வேகமாகவே விற்று தீர்ந்தன.

இதனால் அந்த சமயத்தில் முன்பதிவு செய்ய முடியாமல் போன வாடிக்கையாளர்கள் இக்யுசி காரின் அடுத்த தொகுப்பிற்கான முன்பதிவுகளை மீண்டும் எப்போது தான் துவங்கவுள்ளனரோ என காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அதுதான் வருகிற செப்டம்பரில் அடுத்த தொகுப்பு மெர்சிடிஸ் இக்யுசி கார்கள் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளன என்பதாகும். ஆனால் இம்முறை இக்யுசி மாடலுக்கு சில போட்டிகள் உள்ளன.

அதாவது இக்யுசி-யின் கடந்த ஆண்டு அறிமுகத்திற்கு பிறகு அறிமுகமான ஜாகுவார் ஐ-பேஸ் மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஆடி இ-ட்ரான் மற்றும் இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் கார்களின் போட்டியினை இந்த மெர்சிடிஸ் எலக்ட்ரிக் கார் சந்தித்தாக வேண்டும்.

இவற்றின் விலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட ரூ.1 கோடி என்ற அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதனாலேயே இந்த மூன்று எலக்ட்ரிக் கார் மாடல்களுக்கு இடையிலும் வரும் ஆண்டுகளில் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜாகுவார் ஐ-பேஸ் சில உலகளவிலான விருதுகளை அறுவடை செய்துள்ளது. ஆடி இ-ட்ரான் எலக்ட்ரிக் கார்களை பொறுத்தவரையில் இவற்றை வருகிற ஜூலை 22ஆம் தேதி அறிமுகப்படுத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

போட்டிகள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் லக்சரி எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தை விரிவடைந்து வருகிறது. ஏனெனில் இவை மட்டுமின்றி வால்வோவும் அதன் எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications








