எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு?
எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு கூடி வருகிறது. சொகுசு கார் மார்க்கெட்டிலும் மின்சார மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எஸ்யூவிக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது.

இதனால், பிற நிறுவனங்களும் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றன. இந்த சூழலில், வரும் ஆண்டுகளில் சந்தைப் போட்டி அதிகம் இருக்கும் என்பதால், போட்டியாளர்களைவிட குறைவான விலையில் தனது மாடல்களை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் ஆராய்ந்து வருகிறது.

இதன்படி, இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் கார்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக ஆட்டோ கார் இந்தியா செய்தி தெரிவிக்கிறது. இத்தகவலை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மார்ட்டின் ஷ்வென்க் பகிர்ந்து கொண்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது மின்சா கார்களை EQ என்ற பிராண்டு பெயரில் விற்பனை செய்து வருகிறது. இதில், முதலாவதாக வந்த EQC கார் ரூ.1 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது.

இதைத்தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை கொண்டு வருவதற்கும் மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்துள்ளது. அடுத்து எஸ் க்ளாஸ் காரின் அடிப்படையிலான EQS எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வருவதற்கான திட்டமும் உள்ளது.

மேலும், EQ வரிசையில் EQA மாடலும் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. எனவே, எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யும்போது மிக சவாலான விலையில் கொடுக்க முடியும். சந்தைப் போட்டியையும் சமாளித்து விட முடியும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் கருதுகிறது.

அதேநேரத்தில், எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அசெம்பிள் செய்வது குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை. ஆனால், நிச்சயம் விரைவில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டு, இந்தியர்களுக்கு அந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சென்னை, ஹைதராபாத், பெங்களூர், புனே, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் மட்டுமே இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் இந்த காரை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கும் மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்தியாவிலேயே அசெம்பிள் செய்தால் மட்டுமே தேவையை சமாளிக்க இயலும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








