ஒரே ஒரு ரெக்குவஸ்ட்தான் பண்ணாரு... உடனே 8 கார்களை ஆம்புலன்சாக மாற்றி அனுப்பிய எம்ஜி... யார் அந்த நபர் தெரியுமா
மத்திய பாஜக அமைச்சர் கொடுத்த கோரிக்கையின் பேரில் ஆம்புலன்ஸாக மாற்றப்பட்ட 8 யூனிட் ஹெக்டர் எஸ்யூவி கார்களை எம்ஜி நிறுவனம் நாக்பூருக்கு அனுப்பி வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் எம்ஜி. இந்த நிறுவனம் நாட்டில் விற்பனைச் செய்து வரும் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஹெக்டர் எஸ்யூவி-யும் ஒன்று. இக்காரின் 8 அலகுகலையே (யூனிட்) நிறுவனம் ஆம்புலன்ஸாக மாற்றி அனுப்பி வைத்திருக்கின்றது.

இதனை மத்திய பாஜக அமைச்சர் ஒருவரின் கோரிக்கையின் அடிப்படையில் நிறுவனம் அனுப்பி வைத்திருக்கின்றது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனம் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை ஆகிய துறைகளின் அமைச்சர் நிதின் கட்காரி விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே எட்டு ஹெக்டர் எஸ்யூவி கார்கள் ஆம்புலன்ஸ்களாக மாற்றம் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாம் அலை மிக தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்த துயரமான நிலையால் நாடு முழுவதும் மருத்துவம் சார்ந்த உபகரணங்களின் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. ஆக்சிஜன் மற்றும் ஆம்புலன்ஸ்களின் தட்டுப்பாடு மிக மிக அதிகளவில் தென்படுகின்றது.

இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையிலேயே மஹாராஷ்டிராவின் நாக்பூர் நகரம் சிக்கி தவித்து வருகின்றது. இந்த நகராட்சி உதவும் வகையிலேயே மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, பேடிஎம் மற்றும் எம்ஜி மோட்டார்சுக்கு ஓர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கையில், "உடனடியாக நாக்பூரின் ஆம்புலன்ஸ் தேவைக்கு உதவுமாறு" கேட்டிருந்தார். இந்த கோரிக்கைக்கு உடனடி பதிலளிக்கும் வகையில் எம்ஜி நிறுவனம் ஆம்புலன்ஸாக மாற்றப்பட்ட ஹெக்டர் எஸ்யூவி கார்களை அனுப்பி வைத்திருக்கின்றது.

மிக சமீபத்தில்தான் நாக்பூரில் உள்ள நங்கியா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸாக மாற்றப்பட்ட ஐந்து ஹெக்டர் கார்களை எம்ஜி வழங்கியது. இந்த வாகனத்தில் உயிர்காக்க உதவும் அத்தியாவசிய கருவிகள் உட்பட பல்வேறு முக்கிய கருவிகளையும் நிறுவனம் வழங்கியிருந்தது.

இதேபோன்று, தற்போது வழங்கப்பட்டிருக்கும் ஹெக்டர் எஸ்யூவி ஆம்புலன்ஸ் கார்களில் ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மிக முக்கியமான மருத்துவ கருவிகள் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இது தற்போதைய நாக்பூரின் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையைக் கணிசமாக போக்க உதவும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் ரூ. 15.78 லட்சம் தொடங்கி 22.95 லட்ச ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவையனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications








