இந்த ஊர்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க... ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால் எம்ஜி நிறுவனம் தாராளம்...
ஒன்றிய அமைச்சர் கேட்டு கொண்டதால், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தாராளமாக உதவி செய்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மற்றும் விதர்பா ஆகிய பகுதிகளுக்கு மேலும் 8 ஹெக்டர் ஆம்புலன்ஸ்களை எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது. குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில்தான் இந்த ஹெக்டர் ஆம்புலன்ஸ்களை எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதில், உயிர் காக்கும் பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதில், வென்டிலேட்டர், ஆக்ஸிஜன் சப்ளை சிஸ்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதுதவிர சைரன் மற்றும் தீயணைக்கும் கருவி ஆகிய வசதிகளையும் இந்த ஹெக்டர் ஆம்புலன்ஸ் பெற்றுள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

''சுகாதார பணிகளுக்கு ஹெக்டர் ஆம்புலன்ஸ்களை வழங்கியிருப்பது பெருமையளிக்கிறது. நாக்பூர் மற்றும் விதர்பா பிராந்தியங்களுக்கு உதவி செய்யும்படி நிதின் கட்காரி (மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்) கேட்டு கொண்டார். அதன்பேரில் ஹெக்டர் ஆம்புலன்ஸ்களை விரைவாக டெலிவரி செய்துள்ளோம்'' என எம்ஜி மோட்டார் நிறுவனம் கூறியுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தலைமையில் நடைபெற்ற விழாவில், அதிகாரிகளிடம் 8 ஹெக்டர் ஆம்புலன்ஸ்களும் ஒப்படைக்கப்பட்டன. முன்னதாக குஜராத் மாநிலம் ஹலோல் மற்றும் வதோதரா ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கும் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டர் ஆம்புலன்ஸ்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஆரம்பத்தில் கோவிட்-19 நோயாளிகளின் பயன்பாட்டிற்காக மட்டுமே இந்த ஹெக்டர் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இனி எந்த வகையான மருத்துவ அவசரம் என்றாலும் கூட, இந்த ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும். அத்துடன் இதற்கு முன்பாக ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் எஸ்யூவி காரையும், எம்ஜி மோட்டார் நிறுவனம் மாடிஃபிகேஷன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடமாடும் கோவிட்-19 பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையமாக எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மாற்றப்பட்டிருந்தது. தற்போது இந்த நடமாடும் பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையம், ஹலோல் பகுதி சுகாதார பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தை போல் இன்னும் பல்வேறு நிறுவனங்கள் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் தங்களது பங்களிப்பை செய்துள்ளன.

இதில், மாருதி சுஸுகி, ஹூண்டாய், ஹோண்டா, மஹிந்திரா, ஸ்கோடா, ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் செய்த உதவி குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும் முக கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்வதும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








