டாடா ஹெரியர் & சஃபாரி vs எம்ஜி ஹெக்டர் & ஹெக்டர் ப்ளஸ்... இந்தியாவில் அதிகம் விற்பனையாகுபவை எவை?
விற்பனையில் எம்ஜி மோட்டாரின் ஹெக்டர் இரட்டை மாடல்கள் டாடா ஹெரியர் மற்றும் சஃபாரியை முந்தியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸினால் கட்டாயமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளுக்கு பிறகு இந்திய ஆட்டோமொபைல் துறை குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றத்தை கண்டு வருகிறது.

கொரோனாவின் தாக்கம் தற்போதும் இருக்கும் சூழ்நிலையில் வாகனங்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக எஸ்யூவி கார்களின் விற்பனை வேகமெடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கிய 2020 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா தான் தற்சமயம் இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி காராக உள்ளது.

அதேநேரம் எம்ஜி ஹெக்டர், டாடா ஹெரியர் போன்ற மற்ற எஸ்யூவி கார்களுக்கும் கணிசமான அளவில் தேவை ஏற்பட்டு வருகிறது. இதில் ஹெக்டரின் 3-இருக்கை வரிசை வெர்சனாக ஹெக்டர் ப்ளஸை கடந்த ஆண்டு இறுதியில் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

இவற்றிற்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹெரியரின் 3-இருக்கை வரிசை மாடலாக சஃபாரியை இந்த ஆண்டு துவக்கத்தில், பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்கு கொண்டுவந்தது. அறிமுக மாதம் என்பதால் கடந்த 2021 பிப்ரவரியில் சஃபாரிக்கு ஏகப்பட்ட முன்பதிவுகள் குவிந்தன.

இதன் காரணமாக ஹெக்டர் இரட்டை கார்களை காட்டிலும் கிட்டத்தட்ட 100 யூனிட்கள் அதிகமாக டாடா ஹெரியர் & சஃபாரி கார்கள் மொத்தமாக 3,737 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அந்த மாதத்தில் எம்ஜி ஹெக்டர் இரட்டை கார்களின் விற்பனை எண்ணிக்கை 3,662 ஆகும்.

ஆனால் இந்த நிலை பிப்ரவரி மாதத்தில் மட்டுமே நீடித்தது. கடந்த 2021 மார்ச் மாதத்தில் மீண்டும் ஹெக்டர் கார்களின் கை ஓங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ஹெக்டர் & ஹெக்டர் ப்ளஸ் கார்களை மொத்தமாக 4,720 யூனிட்கள் எம்ஜி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதுவே டாடா ஹெரியர் & சஃபாரி கார்கள் 4,432 யூனிட்களே விற்கப்பட்டுள்ளன. பிப்ரவரியை காட்டிலும் மார்ச் அதிக நாட்கள் கொண்ட மாதம் என்பதால், இந்த இரு நிறுவனங்களது கார்களின் விற்பனையும் எந்தவொரு பிரச்சனையுமின்றி 4 ஆயிரத்தை கடந்துள்ளன. சஃபாரியின் விற்பனை எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் இருந்து ஹெக்டர் & ஹெக்டர் ப்ளஸ் கார்களின் விலைகளை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வுக்கு பிறகு ஹெக்டரின் விலைகள் ரூ.13.35- ரூ.19.43 லட்சம் வரையிலும், சஃபாரியின் விலைகள் ரூ.17.50 லட்சத்தில் இருந்து ரூ.19.61 லட்சம் வரையிலும் உள்ளன.


Click it and Unblock the Notifications








