கொரோனா தீவிரம் எதிரொலி... எம்ஜி நிறுவனத்தின் ஹலோல் கார் ஆலை ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது
கொரோனா பரவல் காரணமாக, எம்ஜி நிறுவனத்தின் ஹலோல் கார் ஆலை ஒரு வாரத்திற்கு மூடப்பட உள்ளது. இதனால், எம்ஜி கார்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதுடன், காத்திருப்பு காலம் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால், பல இடங்களில் அசாரணமான சூழலில் மக்கள் தவித்து வருகின்றனர். மருத்துவமனைகளிலும் போதிய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், மருத்துவம் பார்க்கக்கூட முடியாத நிலையில், பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் அவலமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக, ஆயிரகணக்கானோர் பணிபுரியும் பல முன்னணி நிறுவனங்களின் வாகன உற்பத்தி ஆலைகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டு வருகிறது. அந்த வகையில், எம்ஜி மோட்டார் நிறுவனமும் குஜராத் மாநிலம், ஹலோல் பகுதியில் உள்ள தனது கார் ஆலையை ஒரு வாரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளது.

வரும் 29ந் தேதி முதல் மே 5ந் தேதி வரை ஹலோல் கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறி இருக்கிறார். அம்மாநில அரசு வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா சங்கிலித் தொடரை உடைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மோசமான தருணத்தில் பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும், அவர்கள் நலன் கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராஜீவ் சாபா குறிப்பிட்டுள்ளார்.

கார்களுக்கான உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள், உற்பத்தி செய்த உதிபாகங்களை இருப்பில் வைக்குமாறும், ஹலோல் ஆலையில் கார் உற்பத்தித் துவங்கியவுடன் சப்ளையை தொடரலாம் என்றும் எம்ஜி மோட்டார் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏற்கனவே செமி கன்டக்டர் எனப்படும் கார்களுக்கு தேவையான மிக முக்கிய மின்னணு சாதனத்தின் தட்டுப்பாட்டால் வாகன உற்பத்தியில் பெரும் தடங்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது கொரோனா மீண்டும் வேலையைக் காட்டி வருவதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலையில் உள்ளன.

செமி கன்டக்டர் பிரச்னையால் ஏற்கனவே எம்ஜி கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனாவும் சேர்ந்து கொண்டு ஆட்டம் போடுகிறது. இதனால், வாகன நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.


Click it and Unblock the Notifications