என்னங்க இப்டி ஆயிருச்சு... முன்னணி நிறுவனத்தின் கார் விற்பனை பாதியாக குறைந்தது... காரணம் என்னனு தெரியுமா?
இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார் விற்பனை குறைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் கடந்த நவம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 2,481 கார்களை விற்பனை செய்துள்ளதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 4,163 கார்களை விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்த்தால், எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் விற்பனை 40.40 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார் விற்பனை மிக கடுமையான சரிவை சந்தித்திருப்பதற்கு உலகளாவிய அளவில் நிலவி வரும் செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறைதான் மிக முக்கியமான காரணமாக உள்ளது. செமிகண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதால், கார்களின் உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு கார்களை விரைவாக டெலிவரி செய்ய முடியாத சூழல் காணப்படுகிறது. இருப்பினும் வாடிக்கையாளர்களை விரைவாக கார்களை டெலிவரி செய்யும் வகையில், காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் வெகு சமீபத்தில் அஸ்டர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த எம்ஜி அஸ்டர் கார் கடந்த அக்டோபர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக எம்ஜி அஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் முதல் பேட்ஜில் 5,000 அஸ்டர் கார்களை விற்பனைக்கு ஒதுக்கியது. இந்த 5,000 கார்களும் வெறும் 20 நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டன. இந்த 5,000 கார்களையும் 2021ம் ஆண்டிற்கு உள்ளாகவே, அதாவது நடப்பு டிசம்பர் மாதத்திற்கு உள்ளாகவே வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யவுள்ளதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்ஜி அஸ்டர் காரில் மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இதுதவிர 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் எம்ஜி அஸ்டர் கார் பெற்றுள்ளது. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

அதே நேரத்தில் 1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 8 ஸ்டெப் சிவிடி தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அதே சமயம் 1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது.

எம்ஜி அஸ்டர் காரில் ஏராளமான அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில், அடாஸ் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ரோபட் ஆகியவை மிகவும் முக்கியமானவை. இதுபோன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படுவதும், எம்ஜி அஸ்டர் காருக்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பிற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் அஸ்டர் தவிர, ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் க்ளோஸ்ட்டர் உள்ளிட்ட கார்களையும் விற்பனை செய்து வருகிறது. இதில், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக திகழ்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு அடுத்தபடியாக, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரைதான் இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். வரும் மாதங்களில் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை குறைந்த மாடலை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், சிறிய பேட்டரி மட்டுமே பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் எம்ஜி மோட்டார் நிறுவனத்தால் விலையை குறைவாக நிர்ணயம் செய்ய முடியும். இதன் மூலம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு விற்பனையில் கடுமையான போட்டியை வழங்குவதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் அதிரடியாக திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








