சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
கார் விற்பனையில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் 4,329 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுவே எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக ஒரே மாதத்தில் இவ்வளவு அதிகமான கார்களை எம்ஜி மோட்டார் இந்தியா விற்பனை செய்தது கிடையாது.

அத்துடன் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவன கார்களின் விற்பனை 215 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வெறும் 1,218 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அதிகபட்ச உற்பத்தி, முன்பதிவு மற்றும் விற்பனையை பதிவு செய்துள்ளது'' என கூறப்பட்டுள்ளது. எனவே எம்ஜி மோட்டார் நிறுவனம் 2021ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது என கூறலாம்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தது. இந்திய சந்தைக்கான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ஹெக்டர் களமிறக்கப்பட்டது. டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களுக்கு எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்த எஸ்யூவி விற்பனையில் கடுமையான சவாலை வழங்கி வருகிறது.

தற்போதைய நிலையில் ஹெக்டர் மட்டுமல்லாது, ஹெக்டர் ப்ளஸ் மற்றும் க்ளோஸ்டர் ஆகிய எஸ்யூவி கார்களையும் இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் விற்பனை செய்து வருகிறது. நீண்ட காலமாக இந்திய சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் சில நிறுவனங்களே இன்னும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யாத நிலையில், எம்ஜி மோட்டார் இந்த செக்மெண்ட்டிலும் வலுவாக காலூன்றி விட்டது.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக உள்ளது. இதன் பெட்ரோல் வெர்ஷனையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் எம்ஜி மோட்டார் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில், எம்ஜி இஸட்எஸ் பெட்ரோல் இந்திய சந்தையில் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் இந்த எஸ்யூவி புதிய பெயருடன் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர குறைவான விலையில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றையும், எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் அறிமுகம் செய்வதற்கும் எம்ஜி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை தெளிவாக அறிந்து அதற்கு ஏற்ப எஸ்யூவி கார்களை எம்ஜி மோட்டார் அறிமுகம் செய்து வருகிறது. அத்துடன் இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் கார்களுக்கான சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகரிக்கும் பணிகளையும் எம்ஜி மோட்டார் முடுக்கி விட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








