Ford இந்திய சொத்துக்களை வாங்க பிரபல சீன நிறுவனம் ஆர்வம்... ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியாச்சு!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான Ford-க்கு சொந்தமான சொத்துக்களை வாங்க சீனருக்கு சொந்தமான பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியாகியிருக்கும் முக்கிய தகவல்களைக் கீழே காணலாம், வாங்க.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனம் ஃபோர்டு (Ford). பல்வேறு காரணங்களால் இந்தியாவில் இருந்து வெளியேற இருப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. தொடர் விற்பனை சரிவு, வர்த்தகம் பாதிப்பு உள்ளிட்டவையே நிறுவனத்தின் வெளியேறுதலுக்கான முக்கிய காரணங்கள் என்று கூறப்படுகின்றது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. 2022ம் ஆண்டின் காலாண்டு வரை குறிப்பிட்ட சில மாடல்களின் விற்பனையை மட்டும் இந்தியாவில் தங்கள் நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக ஃபோர்டு அறிவித்திருக்கின்றது. இத்துடன், தங்களின் சென்னை உற்பத்தி ஆலையை எஞ்ஜின்கள் மட்டும் ஏற்றுமதி செய்வதற்காக தயாரிக்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

அதேவேலையில், குஜராத்தில் இருக்கும் கார் உற்பத்தி ஆலையில் வாகன தயாரிப்பு பணிகளை முழுமையாக முடக்க இருப்பதாக நிறுவனம் கூறியிருக்கின்றது. இந்த நிலையில், ஃபோர்டு நிறுவனத்தின் பிளாண்டுகளை (சொத்துக்களை) மற்றுமொரு பிரபல நிறுவனம் வாங்குவதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு எம்ஜி நிறுவனமே ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய உற்பத்தி ஆலைகளை வாங்குவதற்கு தற்போது விருப்பம் தெரிவித்திருக்கின்றது. இந்நிறுவனம் இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சீனருக்கு சொந்தமான நிறுவனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிறுவனமே ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய சொத்துக்களை வாங்குவதற்கு ஆர்வமாக இருப்பதாக இடி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. குஜராத் சனாந்த் மற்றும் சென்னையை அடுத்துள்ள மறைமலை நகர் ஆகிய இரு பகுதிகளிலும் இருக்கும் உற்பத்தி ஆலைகளை வாங்குவதற்கு எம்ஜி தற்போது திட்டமிட்டிருக்கின்றது.

ஃபோர்டு சொத்துக்களை வாங்கும் பேச்சு வார்த்தைகள் மிகவும் ஆரம்ப கட்ட நிலையிலேயே இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத வண்ணம் இருக்கின்றது. அதேசமயம், இதுகுறித்து எம்ஜி நிறுவனத்தன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் சப்பா இடம் கேட்டதற்கு, அவர் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

முன்னதாக கோவிட்-19 வைரசால் ஏற்பட்ட பாதிப்பின்போது ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை பயன்படுத்திக் கொள்ள எம்ஜி நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தற்போது அதன் (ஃபோர்டு) சொத்துக்களை வாங்கும் பேச்சுவார்த்தையில் எம்ஜி களமிறங்கியிருக்கின்றது.

ஃபோர்டு நிறுவனம் ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் தொடங்கி ஓலா வரையிலான பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தகுந்தது. ஒரு வேலை எம்ஜி மோட்டார் நிறுவனம் ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய சொத்துக்களை வாங்குமானால், அங்கு நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்புகள் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுவனம் தற்போது எம்ஜி இசட்எஸ் எனும் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இது சற்று அதிக விலைக் கொண்ட கார் மாடலாகும். இதைக் காட்டிலும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் காரை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் ஹேட்ச்பேக் ரக எலெக்ட்ரிக் கார்களை மிக விரைவில் களமிறக்குவதற்கான பணியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. பவோஜன் இ200 பிளாட்பாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் கார்களையே மிக விரைவில் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவை இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு உள்ளாகவே விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது விற்பனையில் இருக்கும் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்களைக் காட்டிலும் மிகக் குறைவான விலையில் மின்சார வாகனங்கள் விற்பனைக்கு வர இருப்பதாகவும் அனைவரையும் கவரக் கூடிய தகவலை எம்ஜி வெளியிட்டது குறிப்பிடத்தகுந்தது. ஃபோர்டு தயாரிப்பு ஆலை கையகப்படுத்தப்படுமானால் தனது அனைத்து விதமான கார்களின் உற்பத்தி பணியையும் எம்ஜி அந்த ஆலைகளிலேயே தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








