புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் திட்டம்... அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது...
இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்தியாவில் தனது வர்த்தகத்தை தொடங்குவதற்கு தற்போது ஆயத்தமாகி வருகிறது. இந்த நேரத்தில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனமும் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக 20 லட்ச ரூபாய்க்குள் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை அடுத்த ஆண்டு கடைசிக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் கார்களின் வருகைக்காக காத்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் இந்த தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2022ம் ஆண்டு இந்திய சந்தையில் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்வதற்காக, பேட்டரி அசெம்பிளி ஆலையை அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜிவ் சபா தெரிவித்துள்ளார். இதுகுறித்து எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதவிர பேட்டரி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகளிலும் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக ராஜிவ் சபா கூறியுள்ளார். இதன் மூலம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணிக்கும் வகையிலான எலெக்ட்ரிக் வாகனத்தை அடுத்த 18 மாதங்களில் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போதைய நிலையில் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அத்துடன் இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்கும் பணிகளிலும் எம்ஜி மோட்டார் நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருப்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே புதிய எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் அதே நேரத்தில், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனையை உயர்த்துவதற்கும் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், விற்பனையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு நேரடியாக சவால் அளித்து கொண்டுள்ளது. இதுதவிர நேரடி போட்டி இல்லை என்றாலும், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கும் விற்பனையில் சவால் அளித்து வருகிறது. இந்த 3 மாடல்களில் டாடா நெக்ஸான் மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகியவற்றின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஒரு சில எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. அத்துடன் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் எலெக்ட்ரிக் கார்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. எனவே வரும் காலங்களில் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








