டெஸ்லா கார் ஆலையை கொண்டு வர கங்கணம் கட்டிய அமைச்சர் நிதின் கட்காரி
இந்தியாவில் கூடிய விரைவில் கார் உற்பத்தியை துவங்குமாறு டெஸ்லா கார் நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தி உள்ளார். மேலும், டெஸ்லா கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு தேவையான உதவிகளை செய்து தர தயாராக உள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

உலக அளவில் மின்சார கார் உற்பத்தி கேந்திரமாக இந்தியாவை மாற்றுவதற்கான திட்டங்களை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக, பல புதிய திட்டங்களை வகுத்துள்ளதுடன், இந்திய சப்ளையர்களிடம் இருந்தே மின்சார வாகனங்களை உதிரிபாகங்களை பெறுமாறு வாகன உற்பத்தி நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், மின்சார வாகனங்களுக்கான உதிரிபாகங்களின் முக்கிய கேந்திரமாக உள்ள சீனாவிற்கு செக் வைக்கும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி மின்சார வாகன உற்பத்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்தியாவில் மின்சார வாகன உற்பத்திக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் முயற்சித்து வருகிறார்.

இந்த நிலையில், ரெய்சினா டயலாக் 2021 என்ற நிகழ்வில் அமைச்சர் நிதின் கட்காரி பேசினார். அப்போது மின்சார வாகனத்துறை, மின்சார வாகன பேட்டரி தயாரிப்புத் துறை மற்றும் வாகன அழிப்புத் திட்டங்கள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மேலும், பல முக்கிய விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். ரெய்சினா டயலாக் நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது," டெஸ்லா நிர்வாகத்துடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக பேசினேன். அப்போது, கூடிய விரைவில் இந்தியாவில் மின்சார கார் உற்பத்தியை துவங்குமாறு டெஸ்லா நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்தேன்.

தற்போது இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு பொன்னான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர்களிடம் குறிப்பிட்டேன். மேலும், ஏற்கனவே இந்திய சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை டெஸ்லா கார் நிறுவனம் பெற்று வருகிறது. எனவே, இது சாதகமானதாக இருக்கும்.

மேலும், டெஸ்லா கார் தொழிற்சாலைக்கு தேவையான உதவிகளை அரசு செய்து தரும். டெஸ்லா நிறுவனம் தனது கார்களுக்கான தனி உதிரிபாக சப்ளையர்களுடன் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதுடன், மின்சார கார்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.

கூடிய விரைவில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்குவது நல்லது. இல்லையெனில், இந்தியாவில் செயல்படும் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் டெஸ்லாவுக்கு இணையான தரத்தை விரைவில் எட்டிவிடுவர்.

நாளுக்கு நாள் இந்தியாவில் செயல்படும் மின்சார வாகன நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகின்றனர். இதனால், டெஸ்லா தர நிலைகளுக்கு எளிதாக செல்லும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, கூடிய விரைவில் டெஸ்லா இந்தியாவில் உற்பத்தியை துவங்குவது உசிதமாக இருக்கும். இது அவர்களுக்கு பயன் அளிக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழலில், டெஸ்லா நிறுவனம் தனது இந்தியப் பிரிவை பெங்களூரில் பதிவு செய்துள்ளது. கார் விற்பனையை துவங்குவதற்காக இந்த பிரிவை நிறுவியிருக்கிறது. அதேநேரத்தில், இந்தியாவில் கார் உற்பத்தியை துவங்குவதற்கான திட்டம் குறித்து அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த ஆண்டு இறுதியில் டெஸ்லா நிறுவனம் தனது மாடல் 3 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். ரூ.35 லட்சத்தில் இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இந்தியாவிலேயே டெஸ்லா கார்களை உற்பத்தி செய்யும்போது, மிக சரியான விலையில் டெஸ்லா கார்களை பெறுவதற்கான வாய்ப்பை இந்தியர்கள் பெற முடியும்.


Click it and Unblock the Notifications








