வாகன பதிவில் புதிய BH சீரிஸ் அறிமுகம்! இது இருந்தா வேற மாநிலத்துக்கு போகும்போது வரி கட்ட வேண்டாம்! முழு விபரம்
வாகன பதிவு முறையில் புதிய BH சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய பதிவுமுறை குறித்த விரிவான விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒன்றிய அரசாங்கம் வாகன பதிவு முறையில் புதிய பதிவு முறையை அறிமுகம் செய்திருக்கின்றது. "Bharat series" எனப்படும் புதிய BH சீரீஸையே அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பதிவெண் கொண்ட வாகனங்கள் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பயணிக்கலாம். அந்த மாநிலத்திற்கான பதிவு செய்யாமல் வாகனங்கள் இயக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பொதுவாக, ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் போக்குவரத்து வாகன விதிகளின்படி ஓராண்டிற்குள் மறு பதிவு செய்யப்பட வேண்டும். இப்பதிவுடன் அந்த மாநிலத்திற்கான சாலை வரியையும் உரிமையாளர்கள் கட்ட வேண்டும்.

இதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த நிலையிலேயே புதிய பாரத் வரிசை என்கிற புதிய பதிவு முறையை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. தொழில் மற்றும் வேலை ஆகியவை காரணமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறும் நிலை தற்போது பலருக்கு நிலவி வருகின்றது. அவ்வாறு மாறுவோர்களில் பலர் தங்களின் வாகனத்தை அந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு பதிவை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்களை அனுபவித்து வந்தனர்.

இவர்களின் நிலையை உணர்ந்தே புதிய பிஎச் சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. ஒன்றியம் - மாநில அரசுப் பணிகளில் இருப்பவர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள், பாதுகாப்புத்துறையில் இருப்பவர்கள் மற்றும் நான்கு அல்லது அதற்கும் அதிகமான கிளைகளுடன் இயங்கி வரும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் விருப்பத்தின் பேரில் இப்புதிய பிதிவின் மூலம் தங்களின் வாகனங்களை பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு இரு விதமான வரிகள் வசூலிக்கப்படும். ஆகையால், இந்த வாகனங்கள் உரிய மாநிலத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லும்போது மறுபதிவு மற்றும் கூடுதல் வரி கட்டணம் ஆகியவை இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்புதிய பதிவுமுறை குறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இடம்பெயர்தலை எளிதாக்க குடிமக்களை மையமாகக் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தகவல் தொழில்நுட்பங்கள் அடிப்படையில் வாகன பதிவு முறையில் ஓர் புதிய தீர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இது, மாநிலங்களுக்கு இடையே இடம்பெயரும் போது ஏற்படும் சிக்கலை தவிர்க்க உதவும்" என தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 47 இன் கீழ், ஓர் குறிப்பிட்ட மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம் மற்றொரு மாநிலத்தில் 12 மாதங்களைக் கடந்து பயன்பாட்டில் இருக்கக் கூடாது. இந்த அணுகு முறையையே புதிய பிஎச் சீரிஸ் பதிவின் வாயிலாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் மாற்றி அமைத்திருக்கின்றது.

பழைய விதிகளின்படி, ஓர் வாகனம் தாய் மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்திற்கு இடம் பெயருகிறது என்றால் அந்த மாநிலத்தின் ஆர்டிஓ அலுவலகத்தில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். முன்னதாக, தன்னுடைய தாய் மாநிலத்தில் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். இந்த செயல்களைக் காட்டிலும், ஏற்கனவே தாய் மாநிலத்தில் செலுத்தப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்காக விண்ணப்பிப்பது மிகப் பெரிய சிக்கலாக இருக்கின்றது. இவையனைத்தையுமே புதிய பிஎச் சீரிஸ் பதிவு முறை தீர்த்து வைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக HSRP எனும் உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட்டை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் நாட்டில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நம்பர் பிளேட் வழக்கமான ஸ்க்ரூ முறையில் அல்லாமல் ரிவட் முறையில் வாகனங்களில் பொருத்தப்படும். ஆகையால் இதனை அவ்வளவு எளிதில் கழட்டி விட முடியும். இதன்மூலம் போலி பதிவெண் போன்ற பல்வேறு சட்டமீறல் செயலைத் தவிர்க்க முடியும் என அரசு நம்புகின்றது.


Click it and Unblock the Notifications