ஆஃப்-ரோடு வாகனம் தான், அதற்காக ஏரிக்குள் வாகனத்தை இறக்குவதா? பஜெரோ மூலம் மீட்கப்பட்ட மஹிந்திரா தார்
ஏரியில் சேற்றில் சிக்கி கொண்ட மஹிந்திரா தார் வாகனம் மிட்சுபிஷி பஜெரோ காரின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மஹிந்திரா தார் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்று வருகிறதோ, அந்த அளவிற்கு இந்த 2020 வாகனத்தை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் காலமும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தார் வாகனத்தை டெலிவிரி பெற்றவர்களில் சிலர் தங்களது தாரின் செயல்படுதிறனை சோதிக்கும் வகையில் பல்வேறு விதமான சாலைகளிலும், சேறு சகதிகளிலும் இயக்கி பார்த்து சோதனை செய்து வருகின்றனர். இவ்வாறு ஏரிக்குள் இறக்கப்பட்ட மஹிந்திரா தாரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
மை பஜெரோ க்ளப் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஏரியில் இறக்கப்பட்ட தார் வாகனம் சேற்றில் சிக்கிக்கொள்ள, அதனை பஜெரோ எஸ்.எஃப்.எக்ஸ் காரின் உதவியுடன் மீட்பதை பார்க்கலாம். இதற்கு பெரிய அளவில் எந்த உபகரணமும் பயன்படுத்தப்படவில்லை.

வெறும் கயிறு மூலமாகவே தாரை ஏரியில் இருந்து வெளியே கொண்டுவந்துள்ளனர். ஏன் தாரை ஏரிக்குள் எடுத்து சென்றனர்?, எதற்காக மற்றும் எப்படி கொண்டு சென்றனர்? என்பதற்கான பதில்கள் தெரியவில்லை. அதேபோல் எவ்வளவு நேரமாக இந்த தார் சேற்றில் சிக்கியிருந்தது என்பதும் தெரியவில்லை.

ஏரியில் இருந்து வெளியே வந்த பின்னர் ஓட்டுனர் தாரின் கதவுகளை திறக்கும்போது கேபினுக்குள் இருந்து அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் நீண்ட நேரமாகவே இந்த ஆஃப்-ரோடு வாகனம் ஏரிக்குள் இருந்திருக்க வேண்டும்.

ஏரியில் இருந்து வெளியே வரும் தாரில் ஃபாக் விளக்குகள் எரிந்தப்படி உள்ளன. பிறகு என்ஜின் நல்லப்படியாக செயல்பட்டதா என்பது தெரியவில்லை, ஏனெனில் ஏரியில் இருந்து மீட்கப்பட்டதற்கு பிறகு இந்த தார் வாகனத்தின் முன்பக்க பொனெட் பகுதியை சிலர் திறந்து பார்க்கின்றனர்.

பொதுவாகவே ஆஃப்-ரோட்டிற்கு வரும்போது வாகனத்தின் திறன் மட்டுமின்றி ஓட்டுனரின் அனுபவமும் முக்கியமானது ஆகும். ஓட்டுனருக்கு போதிய அனுபவம் இல்லையென்றால், மஹிந்திரா தார் மட்டுமில்லை, ஜீப் வ்ராங்லர், ரேஞ்ச் ரோவர்கள், லேண்ட் க்ருஸர்கள் போன்ற அதிக ஆஃப்-ரோடு திறன் கொண்ட வாகனங்கள் கூட இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி கொள்ளும்.

இவ்வாறான அட்வென்ச்சர் பயணங்களுக்கு வருவதற்கு முன்னரே தங்களது வாகனம் இதற்கு சரிப்பட்டு வருமா என்பதை ஒரு முறை ஆராய்ந்து கொள்ள வேண்டும். புதிய தலைமுறை மஹிந்திரா தாரின் நீர் அலை ஆழம் 650மிமீ வரையில் உள்ளது. இருப்பினும் டயர்கள் சேற்றில் சிக்கி கொண்டால், ஸ்னோர்கிள் இல்லை என்றால் எவ்வாறான ஆபத்தில் சிக்கி கொள்வீர்கள் என்பதற்கு இந்த வீடியோவே ஒரு உதாரணமாகும்.

கயிற்றை கட்டி இவ்வாறு இழுக்கும் போது கயிற்றுக்கு அருகில் யாரும் செல்லக்கூடாது. ஆனால் இந்த வீடியோவில் ஒருவர் கயிறுக்கு அருகிலேயே உள்ளார். ஒருவேளை அறுந்து போனால், அது அருகில் உள்ளவர்களுக்கு வலுவான சவுக்கடியாக கூட மாறலாம்.


Click it and Unblock the Notifications








