பாதுகாப்பற்ற வாகனங்களின் விற்பனையை நிறுத்துங்கள்... கார் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவு...
பாதுகாப்பற்ற வாகனங்களின் விற்பனையை நிறுத்துங்கள் என வாகன உற்பத்தியாளர்களுக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) செயலாளர் கிரிதர் அரமனே உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய அரசு வாகனம் சார்ந்து பல்வேறு புதிய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அண்மையில் காற்று மாசுபாட்டில் பெரும் பங்கினை வகிக்கும் பழைய வாகனங்களை (15 ஆண்டுகள் பழைய வர்த்தக வாகனம் மற்றும் 20 ஆண்டுகள் பழைய தனி நபர் வாகனம்) முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் வகையில் புதிய வாகன அழிப்பு கொள்கையை அறிவித்தது.

இதற்கு முன்னதாக பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்தை நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டு வந்தது. இதுமட்டுமின்றி, மின் வாகன ஊக்குவிப்பிற்கும் சூப்பர் ஃபாஸ்ட் பச்சைக் கொடியை மத்திய, மாநில அரசுகள் காட்டி வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாகனங்களின் பாதுகாப்பு சார்ந்த விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, பாதுகாப்பற்ற வாகனங்களின் விற்பனையை நிறுத்துமாறு இந்திய அரசு வாகன உற்பத்தி நிறுவனங்களிடத்தில் கூறியிருக்கின்றது. "இது ஓர் மன்னிக்க முடியாத குற்றம்" என குறிப்பிட்ட சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) செயலாளர் கிரிதர் அரமனே, "இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் சிலர் தரமற்ற வாகனங்களை விற்பனைச் செய்வது வேதனையளிக்கின்றது" என கூறினார்.

அண்மையில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. இதில் பங்கேற்றபோதே இத்தகைய கருத்தை கிரிதர் அரமனே முன் வைத்ததாக ஈடி ஆட்டோ ஆங்கில செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், "இந்தியா வகுத்த பாதுகாப்பு தரம் பற்றிய வழிகாட்டுதலை ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே கடைப்பிடிக்கின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் இதனை இன்னும் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றன" என்றார்.

இதுமட்டுமின்றி, "வேணுமென்றே சிலர் தரத்தைக் குறைத்திருப்பதாகவும், இத்தகைய நடவடிக்கையை அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்" என்றும் அவர் கூறினார். அதேசமயம், "குறிப்பிட்ட சில உற்பத்தியாளர்கள் புதிய பாதுகாப்பு தரத்தை தங்களின் புதிய வாகனங்களில் செயல்படுத்தி வருவதாகவும்" அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் ஓர் புதிய வாகனத்தை வாங்கும் முன்பு அது எத்தகைய தரத்திலானது, பாதுகாப்பானதுதானா என்பதை கண்டறிந்து வாங்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். மேலும், இந்தியாவில் விற்பனைக்கு வரும் அனைத்து வாகனங்களும் பாதுகாப்பு மதிப்பீடு குறித்த ஆய்வினை பெறுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் செயலாளர் கிரிதர் அரமனேவின் இந்த கருத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது. பாதுகாப்பான பயணத்தைக் கேள்வியெழுப்பும் வகையில் விற்பனையில் இருக்கும் வாகனங்களின் விற்பனைக்கு ஆப்பு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








