விற்பனையில் முந்தி கொண்டு வரும் டாடா அல்ட்ராஸ்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!
இந்தியாவில் டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை தூள் கிளப்பி கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி பலேனோ முதல் இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் 14,729 பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 11,575 ஆக மட்டுமே இருந்தது.

இதன் மூலம் விற்பனையில் 27 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருப்பதுடன், கடந்த ஜூலை மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் என்ற பெருமையையும் மாருதி சுஸுகி பலேனோ பெற்றுள்ளது. இந்த பட்டியலில் டாடா அல்ட்ராஸ் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. டாடா நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் 6,980 அல்ட்ராஸ் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 3,636 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் டாடா அல்ட்ராஸ் விற்பனையில் 92 சதவீதம் என்ற மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இதன் மூலம் இந்த செக்மெண்ட்டில் மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெருமையை அல்ட்ராஸ் பெற்றுள்ளது. இதுவரை மூன்று மேட் இன் இந்தியா கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. இதில், அல்ட்ராஸ் ஒன்று. எஞ்சிய இரண்டும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் ஆகும்.

டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகியவைதான் அந்த இரண்டு கார்கள். இந்திய வாடிக்கையாளர்கள் சமீப காலமாக பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளதற்கு இதுவே மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை ஹூண்டாய் ஐ20 பிடித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் 6,518 ஐ20 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 6,344 ஆக இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 3 சதவீத வளர்ச்சியை ஹூண்டாய் ஐ20 பதிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில் டொயோட்டா க்ளான்சா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இது மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். டொயோட்டா நிறுவனம் மாருதி சுஸுகி கார்களை ரீபேட்ஜ் செய்து தங்களது பிராண்டில் விற்பனை செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். க்ளான்சா தவிர டொயோட்டாவின் அர்பன் க்ரூஸரும் ரீபேட்ஜ் செய்யப்பட்ட கார்தான்.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா சப்-4 மீட்டர் எஸ்யூவியைதான் டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. சரி, டொயோட்டா நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் 2,636 க்ளான்சா கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 1,323 ஆக மட்டுமே இருந்தது.

இதன் மூலம் விற்பனையில் 99.2 சதவீத வளர்ச்சியை டொயோட்டா க்ளான்சா பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தை ஃபோக்ஸ்வேகன் போலோ பிடித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் 1,616 போலோ கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 1,146 ஆக இருந்தது.

இதன் மூலம் விற்பனையில் 41 சதவீத வளர்ச்சியை ஃபோக்ஸ்வேகன் போலோ பதிவு செய்துள்ளது. இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் கூடிய விரைவில் புதிய எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் அது.

டாடா நிறுவனம் ஏற்கனவே ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இன்றைய தேதியில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் கார் இதுதான். இதே பாணியில் அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.


Click it and Unblock the Notifications








