வயசுதான் சின்னது! மனசு ரொம்ப பெருசு! ஏழை, எளிய மக்களுக்காக 6 கார்களை ஆம்புலன்சாக மாற்றிய இளம் தொழிலதிபர்!!
இளம் தொழிலதிபர் தன்னிடம் இருந்த அனைத்து கார்களையும் ஆக்சிஜன் வசதிக் கொண்ட ஆம்புலன்ஸ்களாக மாற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் மிகக் கடுமையான தாக்கத்தை நிகழ்த்தி வருகின்றது. நாடு முழுவதும் நாளொன்றிற்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மருத்துவமனைகள் அனைத்திலும் நோயாளிகள் நிரம்பி வழியும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதன் விளைவாக பல மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் மருத்து உபகரணங்களின் பற்றாக்குறை தலை விரித்தாட தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஆக்சிஜன் தட்டுப்பாடு நாட்டையே உலுக்கி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் ஓர் தொழிலதிபர் அவரது கார்கள் அனைத்தையும் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படுக்கை மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நாடு முழுவதும் தலை விரித்தாடும் சூழ்நிலையில் இத்தகைய நடவடிக்கையை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் மேற்கொண்டிருக்கின்றார். தனது, ஐந்து டொயோட்டா இன்னோவா எம்பிவி மற்றும் ஓர் டொயோட்டா இடியோஸ் காரை ஆம்புலன்ஸ்களாக அவர் மாற்றியிருக்கின்றார்.

தொற்று பரவல் நாடு முழுவதும் அதிகமாகக் காணப்படுகின்றது. இதைவிட தனியார் ஆம்புலன்ஸ்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து காணப்படுகின்றது. பலரால் இந்த கட்டணத்தைச் செலுத்தி மருத்துவமனைக்கு போக முடியாத நிலை இருக்கின்றது. இதனால் சிலர் கால தாமதம் ஏற்பட்டு மாற்று வாகனங்களில் செல்லும் வழியிலேயே இறந்துவிடுகின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் தொழிலதிபர், தன்னிடம் இருக்கும் அனைத்து கார்களையும் ஆம்புலன்ஸ்களாக மாற்றியிருக்கின்றார்.

மிகக் குறைந்த கட்டணத்திலேயே அனைத்து ஆம்புலன்ஸ் கார்களையும் இயக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதாவது, கூடுதல் கட்டணம் ஏதுமின்றி பயணத்திற்கான தொகை எவ்வளவோ அதை மட்டும் சலுகையுடன் வசூலிக்க அவர் திட்டமிட்டிருக்கின்றார். ஏழை, எளிய மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்திருக்கின்றார்.

ஆம்புலன்ஸாக மாறிய கார்கள்
ஆம்புலன்ஸ்களாக மாற்றுவதற்காக மிக குறைந்த மாற்றங்களையே கார்களில் தொழிலதிபர் செய்திருக்கின்றார். அதாவது, டொயோட்டா இன்னோவா காரின் நடு வரிசை இருக்கையினை முழுமையாக சாய்த்து ஓர் நோயாளி படுக்கும்படி செய்திருக்கின்றார். இத்துடன், அவருடன் ஒருவர் அமர்ந்து வரும் வகையில் ஓர் இருக்கையையும் அவர் தயார்படுத்தியுள்ளார். இந்த மாற்றம் நிச்சயம் நோயாளிகள் சௌகரியமாக படுத்து செல்ல ஏதுவாக இது இருக்கும்.

இத்துடன், ஆக்சிஜன் சிலிண்டர்களை கடைசி இருக்கைக்கு அடியில் நிலை நிறுத்தியிருக்கின்றனர். மிக எளிதில் கையாளும் வகையில் அவை நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மிக சிறிய மாற்றங்களே அனைத்து கார்களிலும் செய்யப்பட்டு ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டிருக்கின்றது.
Image Courtesy: India Today
இளம் தொழிலதிபரின் இந்த நடவடிக்கையைக் கண்டு மத்திய பிரதேச மாநில மக்கள் நெகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர். மேலும், அவரை சமூக வலைதள வாசிகள் பலர் பாராட்டவும் தொடங்கியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








