இனி ஆட்டோக்காரர்களால் பாட்டு கேட்க முடியாது... ஆட்டோவில் இசை ஒலிக்க தடை... கவலைப்படாதீங்க இங்கு மட்டுமே தடை...
ஆட்டோவில் மியூசிக் சிஸ்டம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த மாநிலத்தில் இந்த தடை என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

ரூட் சொல்வது முதல் உரிய நேரத்தில் சேர வேண்டிய இடத்தில் கொண்டுபோய் சேர்ப்பது வரை அனைத்திலும் கெட்டிக் காரர்கள் நம்ம ஊரு ஆட்டோக்காரர்கள். இவர்கள், கார்களில் இருப்பதைப் போலவே பெரிய பெரிய ஸ்பீக்கர் பாக்ஸ்களைக் கொண்டு, தாங்களின் ஆட்டோக்களையும் அலங்கரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். மிகப்பெரிய இசை பிரியர்கள் என்பதை சொல்லாமல் சொல்லும் வகையில் இதனை அவர்கள் மேற்கொள்கின்றனர்.

இனி இதுபோன்று இவர்களால் தங்களின் ஆட்டோவில் ஸ்பீக்கர்களை வைத்திருக்க முடியது என்பதே தற்போதைய அதிர்ச்சியான தகவல். இதற்கே அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திலேயே இந்த அதிரடி தடை உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று சக்கரங்கள் கொண்ட எந்தவொரு வாகனத்திலும் மியூசிக் சிஸ்டம் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக புதிய விதியை மாநில அரசு உருவாக்கியுள்ளது. மாநில போக்குவரத்து சட்டத்தின்கீழ் இந்த புதிய விதியை அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதனால், இசை மீது அதிகம் பிரியம் கொண்டவர்களாக வலம் வந்துக் கொண்டிருக்கும் ஆட்டோ டிரைவர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். மாநில ஆட்டோரிக்ஷா ஒழுங்குமுறை திட்டம் 2021 இன் கீழே இந்த நடவடிக்கைய மத்திய பிரதேச அரசு மேற்கொண்டிருக்கின்றது. இந்த திட்டம், முச்சக்கர வாகனங்களில் மாற்றம் செய்ய அனுமதிப்பதில்லை.

ஆகையால், மியூசிக் சிஸ்டம் பொருத்துவதையும் ஓர் மாற்றமாக (மாடிஃபிகேஷன்) கருதி, அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சந்தைக்கு பிறகான மியூசிக் சிஸ்டங்களை வாங்கி பயன்படுத்துவோர்களுக்கு இந்த தடை கட்டாயம் பொருந்தும்.

இதைக் கடைபிடிக்காத ஆட்டோக்களின் பதிவு மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என மத்திய பிரதேச அரசு ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை வழங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி அன்று மத்திய பிரதேச மாநிலத்தின் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் மியூசிக் சிஸ்டம் தடை விதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

மியூசிக் சிஸ்டம் தடை விதிப்பு மட்டுமின்றி இன்னும் பல அதிரடி விதிகளை ஆட்டோக்களை சார்ந்து மத்திய பிரதேச அரசு வெளியிட்டிருக்கின்றது. அதாவது, ஒரே ஆட்டோ ஓட்டுநர் இரண்டு முறை விதிமீறல்களில் ஈடுபட்டால் அவரின் பர்மிட் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஏற்கனவே சிக்னல் விதிமீறல், ஸ்டாப் லைனை தாண்டி ஆட்டோவை நிறுத்துதல், ஓவர் ஸ்பீட், மது அருந்துவிட்டு ஆட்டோ ஓட்டுதல் என இதுபோன்ற விதிமீறல்களில் தொடர்ச்சியாக இரண்டு முறை ஈடுபட்டால் உடனடியாக பர்மிட்டை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் என எந்த எஞ்ஜின் ஆட்டோவாக இருந்தாலும் மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்க அனுமதி இல்லை என்றும் அதிர்ச்சி மிகுந்த தகவலை மபி அரசு வெளியிட்டுள்ளது. அதேசமயம், அந்த ஆட்டோவை சிஎன்ஜி எஞ்ஜினுக்கு மாற்றம் செய்து பயன்படுத்தலாம் கூறியுள்ளது.

தொடர்ந்து, ஆட்டோக்களில் மணிக்கு 40கிமீ வேகத்தில் இயங்க வைக்கக்கூடிய ஸ்பீடு லிமிட்டர்களைப் பயன்படுத்தவும் அரசு கூறியுள்ளது. ஆட்டோக்கள் அதிக வேகத்தில், குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு சேர்க்கும் என்ற காரணத்தினாலேயே மக்கள் பலர் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

இதற்கே ஆப்பு வைக்கும் வகையில் ஸ்பீடு லிமிட்டர்களைப் பயன்படுத்தும்படி அரசு கூறியிருக்கின்றது. அதிகரித்து வரும் விபத்து மற்றும் ஓட்டுநர்களின் நலன் கருதி இந்த உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

அரசின் புதிய உத்தரவுகள் பல நடைமுறைக்கு மாறானதாக இருப்பதாக கருத்து தெரிவித்திருக்கும் இந்தூர் ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் ராஜேஷ் பித்கர், இதற்கான எதிர்ப்பை விரைவில் நாங்கள் காண்பிப்போம் என கூறியிருக்கின்றார். அதேசமயம், ஆட்டோக்களில் ஒலிக்கும் அதிக சத்த மியூசிக் சிஸ்டத்திற்கு அரசு தடை விதித்திருப்பதை பொதுமக்கள் பலர் வரவேற்றிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








