இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது... நச்சுப் புகையை அதிகம் கக்கும் வாகனங்களுக்கு வருகிறது 'ஆப்பு'!
வாகனங்களுக்கு வழங்கப்படும் மாசு உமிழ்வு தரச் சான்று இனி தேசிய பதிவேட்டுடன் இணைக்கப்பட உள்ளது. இதனால், அதிக மாசு உமிழ்வை ஏற்படுத்தும் வாகனங்களை அதிகாரிகள் கண்காணித்து துரித நடவடிக்கை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட உள்ளது.

வாகனங்கள் வெளியிடும் புகையில் நச்சுத்தன்மையுள்ள பொருட்களின் அளவை வைத்து மாசு உமிழ்வு சான்று வழங்கப்படுகிறது. வாகன பதிவுச் சான்று, காப்பீட்டுச் சான்று போன்று மாசு உமிழ்வு சான்று வைத்திருப்பதும் கட்டாயமாக உள்ளது.

இந்த நிலையில், நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வடிவத்தில் மாசு உமிழ்வு சான்றை வழங்குவதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில், வாகனங்களின் மாசு உமிழ்வு தரத்தை எளிதாக கண்டறிந்து, கண்காணிப்பதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வாகன மாசு உமிழ்வு (PUC) சான்று வழங்கப்படும். மாசு உமிழ்வு சான்று தரவுகள் இனி தேசிய பதிவேட்டுடன் இணைக்கப்படும்.

மேலும், வாகன உரிமையாளருக்கு வழங்கப்படும் சான்றில் QR Code அச்சிடப்பட்டு இருக்கும். இதன்மூலமாக, மாசு உமிழ்வு சோதனை மையத்தின் விபரத்தை பெற முடியும். வாகனத்தின் மாசு உமிழ்வு தர அளவு, வாகன உரிமையாளரின் விபரம், வாகனத்தின் சேஸீ எண்ணின் (கடைசி 4 இலக்க எண்கள் மட்டும் தெரியும்) ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

வாகனங்களுக்கு மாசு உமிழ்வு செய்யும்போது வாகன உரிமையாளரின் மொபைல் எண்ணை கொடுப்பது கட்டாயமாக்கப்படுகிறது. இந்த மொபைல் எண் சம்பந்தப்பட்ட வாகன மாசு உமிழ்வு பதிவேட்டில் இணைக்கப்படும். மாசு உமிழ்வு கட்டணத்தை செலுத்தும்போது உரிமையாளரின் மொபைல் எண் ஓடிபி எனப்படும் குறியீட்டு எண்களை வைத்து சரிபார்க்கப்படும். வாகனம் மற்றும் வாகன உரிமையாளரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அடுத்து, நிராகரிப்பு சீட்டு எனும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. வாகனங்களுக்கு மாசு உமிழ்வு சோதனையின்போது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச அளவைவிட கூடுதலாக மாசு உமிழ்வை வெளிப்படுத்துவது தெரிய வந்தால், காரணம் குறிப்பிடப்பட்டு நிராகரிப்புச் சீட்டு வழங்கப்படும். இதனை வைத்து சர்வீஸ் மையங்களில் வாகனங்களை பழுது நீக்கப் பணிகளுக்கு கொடுக்கும்போது காட்ட முடியும். அதேபோன்று, மாசு உமிழ்வு சோதனை கருவி சரியாக செயல்படவில்லை என்று கருதினால், மற்றொரு மையத்தில் இந்த சான்றை காட்டி சோதனை செய்ய முடியும்.

மாசு உமிழ்வு தர நிர்ணயத்திற்கு உட்படாமல் அதிக நச்சுப் புகையை வெளியேற்றும் வாகனங்களை அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களில் மாசு உமிழ்வு சோதனைக்கு உட்படுத்துவதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரி நடவடிக்கை எடுக்க முடியும். சம்பந்தப்பட்ட வாகனத்தை அதன் உரிமையாளர் அல்லது பொறுப்பாளர் கொண்டு வருவதற்கு கடிதம், மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் மூலமாக நோட்டீஸ் அனுப்புவார்.

வாகன ஓட்டி அல்லது பொறுப்பாளர் அதிகாரியின் கடிதத்திற்கு செவி சாய்க்காமல், வாகனத்தை சோதனைக்கு கொண்டு வந்து ஒப்படைக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும். மேலும், பியூசி சான்று பெறும் வரை வாகனத்தின் பதிவுச் சான்று மற்றும் அனுமதி சான்றுகளை ரத்து செய்து வைக்க முடியும். புதிய பியூசி சான்று நடைமுறை மூலமாக நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக மாசு உமிழ்வு ஏற்படுத்தும் வாகனங்களை எளிதாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications








