அடேங்கப்பா... மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு இத்தனை ஆயிரம் முன்பதிவுகளா? உற்பத்தியே பண்ண முடியல!
புதிய தலைமுறை தார் எஸ்யூவி காருக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை தார் எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அப்போது முதலே புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இந்த சூழலில், முன்பதிவு எண்ணிக்கையில் புதிய தலைமுறை தார் எஸ்யூவி புதிய மைல்கல் ஒன்றை கடந்துள்ளது.

ஆம், புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு தற்போது வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இந்த தகவலை மஹிந்திரா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல், புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே அதனை வாங்க பலர் போட்டி போட்டு வருகின்றனர்.

தேவையை பூர்த்தி செய்வதற்காக புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் உற்பத்தியை மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே உயர்த்தி விட்டது. ஆனால் இன்னமும் புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு நீண்ட காத்திருப்பு காலம் நிலவி வருகிறது. தற்போதைய நிலையில் நீங்கள் தேர்வு செய்யும் வேரியண்ட்டை பொறுத்து அதிகபட்சமாக 46 அல்லது 47 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆம், ஒரு காரை டெலிவரி பெறுவதற்கு நீங்கள் சுமாராக 11 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கான காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருப்பதற்கு, மிகப்பெரிய அளவில் டிமாண்ட் இருப்பது மட்டும் காரணம் கிடையாது. இதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

செமி கண்டக்டர் சிப்களுக்கு உலக அளவில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைதான் அது. கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பிறகு, லேப்டாப்கள் மற்றும் செல்போன்களுக்கு தேவை உயர்ந்துள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகதான் செமி கண்டக்டர் சிப்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நவீன கார்களின் மூளை என கூறப்படும் செமி கண்டக்டர்கள் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால் ஆட்டோமொபைல் துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு அதிக காத்திருப்பு காலம் நிலவி வருவதற்கு, செமி கண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையும் முக்கியமான காரணமாக உள்ளது.

இன்னும் சொல்லப்போனால் புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்களை டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இல்லாமல் மஹிந்திரா நிறுவனம் டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைத்து வருகிறது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படுவதற்கு முன்னதாக, இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வருவதற்கு அந்த கார்கள் காத்து கொண்டுள்ளன.

ஆனால் செமி கண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால் மஹிந்திரா நிறுவனம் மட்டும் பாதிக்கப்படவில்லை. உலகின் முன்னணி நிறுவனங்கள பலவும் இந்த பிரச்னையில் சிக்கியுள்ளன. இதன் காரணமாக ஒரு சில நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன. இன்னும் சில நிறுவனங்கள் தற்காலிகமாக தொழிற்சாலைகளை மூடியுள்ளன.


Click it and Unblock the Notifications








