ஓரங்கட்டேய்... செக்மென்ட்டிலேயே சக்திவாய்ந்த எஞ்சின்களுடன் மிரட்ட வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500!
மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் அதிசக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகளுடன் இரண்டாம் தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பும் மாடல்களில் ஒன்றாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 இருந்து வருகிறது. ஆளுமைான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகள், சரியான விலை மட்டுமல்ல, இது 7 சீட்டர் மாடல் என்பதும் மிகப்பெரிய சாதகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், மிட்சைஸ் எஸ்யூவி சந்தையில் கடும் சந்தைப் போட்டி எழுந்துள்ளது. எக்ஸ்யூவி500 எஸ்யூவியை குறிவைத்து எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி உள்ளிட்ட மாடல்கள் வரிந்து கட்டி உள்ளன.

இந்த நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கும் வகையில், முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக இந்த புதிய மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், போட்டியாளர்களைவிட எக்ஸ்யூவி500 எஸ்யூவியை அதிக மதிப்புவாய்ந்த மாடலாக நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. இதன்படி, ADAS என்ற லெவல் 1 ஆட்டோனாமஸ் டெக்னாலஜி, மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் இருப்பது போன்ற இரட்டை திரை அமைப்புடைய டேஷ்போர்டு, 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த சூழலில், இரண்டாம் தலைமுறை மாடலாக வர இருக்கும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் அதிக சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது, கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் புதிய பெட்ரோல் எஞ்சின்களை பார்வைக்கு வைத்திருந்தது. எம்- ஸ்டாலியன் என்ற வரிசையில் பல்வேறு சிசி திறன் கொண்டதாக இந்த பெட்ரோல் எஞ்சின்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதில் மிகவும் சக்திவாய்ந்ததாக 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின்தான் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் பொருத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். அதாவது, அண்மையில் வந்த எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் விரைவில் வரும் டாடா சஃபாரி எஸ்யூவி மாடல்களைவிட மிக மிக சக்திவாய்ந்த எஞ்சினுடன் வர இருக்கிறது.

மறுபுறத்தில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் டாடா சஃபாரி எஸ்யூவி மாடல்களில் பயன்படுத்தப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. இந்த நிலையில், புதிய எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் வழங்கப்பட உள்ள 180 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

அத்துடன், மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் மாடலாக உள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவியை விடவும், புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவி சக்திவாய்ந்த மாடலாக இருக்கும். ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் 161 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும், டீசல் மாடல் 171 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக உள்ளது.

அதாவது, இதன் ரக கார் மாடல்களில் அதிக சக்திவாய்ந்த தேர்வாக மாற இருக்கிறது. அத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் டீசல் எஞ்சின் வேரியண்ட்டுகளில் வழங்கப்படும். இந்த ஆண்டு பிற்பாதியில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
Via- ICN


Click it and Unblock the Notifications








