Celerio-க்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... மைலஜ் இவ்ளோ அதிகமா தந்தா இப்படிதான் நடக்கும்!
மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் புதிய தலைமுறை செலிரியோ (Celerio) ஹேட்ச்பேக் காருக்கு இந்தியாவில் புக்கிங் பல மடங்கு அதிகரித்து காணப்படுகின்றது. இதுகுறித்து நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியிருக்கும் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் மிக சமீபத்தில் புதிய தலைமுறை செலிரியோ (Celerio) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முன்பு விற்பனையில் இருந்த செலிரியோவைக் காட்டிலும் பல மடங்கு புதிய அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் அது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

வசதிகள் மற்றும் அம்சங்கள் மட்டுமில்லைங்க அதன் தோற்றத்திலும் பல மடங்கும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த புதிய மாற்றங்கள் தற்போது அக்காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தர தொடங்கியிருக்கின்றது. ஆமாங்க, இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல டிமாண்ட் கிடைக்க தொடங்கியிருக்கின்றது.

மாருதி சுசுகி செலிரியோவிற்கு தற்போது 15 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அதிகபட்ச புக்கிங் காரணத்தினால் காத்திருப்பு காலம் சற்றே எகிரியிருக்கின்றது. புக்கிங் மிக அதிகளவில் கிடைத்து வருகின்ற காரணத்தினால் 12 வாரங்கள் வரை இக்காருக்கு காத்திருக்க வேண்டும் என்ற நிலை இந்தியாவில் உருவாகியிருக்கின்றது.

மாருதி சுசுகி செலிரியோ இந்தியாவில் நவம்பர் 10ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதற்குள்ளாகவே 15 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கை அக்கார் பெற்றிருப்பது இந்திய வாகன உலகில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. காருக்கான புக்கிங் பணிகள் நவம்பர் 2ம் தேதியில் இருந்தே நடைபெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது.

செலிரியோவின் உச்சபட்ச புக்கிங் பற்றிய தகவலை மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குநர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கார் அண்ட் பைக் தளத்திற்கு கூறியதாவது, "இதுவரை சுமார் 15,000 முன்பதிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம். பழைய செலிரியோவைக் காட்டிலும் புதிய ஒன்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. பழைய செலிரியோ மாதம் ஒன்றிற்கு 5 ஆயிரம் யூனிட் முதல் 6 ஆயிரம் யூனிட் வரை மட்டுமே விற்பனைக்குக் கிடைத்தது" என்றார்.

ஆகையால், புதிய மாருதி சுசுகி செலிரியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில் 12 வாரங்கள் என்ற அதிகபட்ச காத்திருப்பு காலத்திற்கு தற்போது உலகளவில் நிலவும் செமிகன்டக்டர் பற்றாக்குறையும் முதன்மையான காரணமாக இருப்பதாக ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறியிருக்கின்றார்.

செமிகன்டக்டர் பற்றாக்குறை காரணமாக நிறுவனத்தின் உற்பத்தி திறன் பெரிதும் பாதிப்படைந்திருக்கின்றது. 2021 செப்டம்பர் மாதத்தில் நிறுவனத்தின் உற்பத்தி திறன் 60 சதவீதமாக குறைந்தது. இதேபோல் அக்டோபர் மாதத்தில் 40 சதவீதமாகவும், நவம்பர் மாதத்தில் 15 சதவீதமும் உற்பத்தி திறன் குறைக்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி 2.50 லட்சம் ஆர்டர்கள் நிலுவையில் இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதுமாதிரியான இக்கட்டான சூழ்நிலை காரணமாக மாருதி சுசுகி செலிரியோவிற்கு 12 மாதங்கள் காத்திருப்பு காலத்தை அறிவித்திருக்கின்றது. பெட்ரோல் தயாரிப்புகளுக்கு காத்திருப்பு காலம் 9 வாரங்கள் தொடங்கி 12 வாரங்களாகவும், சிஎன்ஜி தேர்வுகளுக்கு 17 வாரங்கள் முதல் 18 வாரங்களாக உள்ளது.

ஏழாண்டுகளுக்கு பிறகு புதிய தலைமுறை செலிரியோ அதிக அம்சங்களுடன் இந்திய சந்தையை வந்தடைந்திருக்கின்றது. இந்த காரை நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஹார்டெக்ட் பிளாட்பாரத்தை பயன்படுத்தி உருவாக்கியிருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தைக் கொண்டே சற்று உயரமான பையனாக இது உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்த காரில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், ட்யூவல் ஜெட், ட்யூவல் விவிடி, கே10சி பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 66 பிஎச்பி மற்றும் 89 என்எம் டார்க் திறனை வெளியற்றும் வசதிக் கொண்டது. மேலும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஏஎம்டி அல்லது ஏஜிஎஸ் கியர் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இந்த எஞ்ஜின்கள் மிக அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லிட்டர் ஒன்றிற்கு இது 26.68 கிமீ வரை மைலேஜ் வழங்கும்.


Click it and Unblock the Notifications








