புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரின் அறிமுகம் தள்ளி போகலாம்... ஏன் தெரியுமா?
புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரின் அறிமுகம் தள்ளி போகலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி செலிரியோ கடந்த 2014ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக இது இருந்து வருகிறது. ஆனால் நாட்கள் ஆக ஆக இந்திய வாடிக்கையாளர்களுடைய எதிர்பார்ப்புகளும் மாறி கொண்டே இருக்கின்றன.

எனவே புதிய தலைமுறை செலிரியோ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. புதிய தலைமுறை செலிரியோ இந்தியா சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி சோதனை செய்யப்படும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை கிடைத்துள்ளன.

இப்படிப்பட்ட சூழலில், புதிய தலைமுறை செலிரியோ காரின் அறிமுகம் தாமதமாகலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக எதிர்வரும் பண்டிகை காலத்தில்தான் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக காடிவாடி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதுதான் இதன் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக கார் விற்பனையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பண்டிகை காலத்தின்போது புதிய கார்களை வாங்குவதற்கு ஏராளமானோர் முன்வருவார்கள். எனவே பண்டிகை காலத்தில் புதிய தலைமுறை செலிரியோவை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

ஹார்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ கட்டமைக்கப்படுகிறது. ஏற்கனவே வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசையர், எஸ்-பிரஸ்ஸோ மற்றும் இக்னிஸ் ஆகிய கார்கள் ஹார்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

முந்தைய தலைமுறை மாடலை விட புதிய தலைமுறை மாடல் அகலமாகவும் மற்றும் நீளமான வீல்பேஸ் நீளம கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கேபினில் இடவசதியும் தாராளமாக இருக்கலாம். கேபினை பொறுத்தவரை புதிய டேஷ்போர்டு, புதிய ஸ்டியரிங் வீல் மற்றும் புதிய அதிநவீன இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகள் உடன் ஸ்மார்ட்பிளே டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், புதிய ஆடியோ சிஸ்டம் ஆகியவை வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செயல்திறனை பொறுத்தவரை தற்போது உள்ள 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் கே-சீரிஸ் இன்ஜின் தொடர்ந்து வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த இன்ஜின் 68 பிஎஸ் பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. புதிய தலைமுறை செலிரியோ இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








