புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் டீசர் வெளியீடு... இந்திய அறிமுகம் எப்போது?
விரைவில் அறிமுகமாக உள்ள புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா காரின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் இந்தியாவிலும் நிச்சயம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த கார் பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த 1999ம் ஆண்டு உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா ஃபேபியா கார் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வந்தது. இந்தியாவிலும் இந்த கார் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாத நிலையில், விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், புதிய கட்டமைப்புக் கொள்கையில் ஸ்கோடா ஃபேபியா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நான்காம் தலைமுறை மாடலாக இந்த கார் விரைவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த காரின் டீசரை ஸ்கோடா வெளியிட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB-AO என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் போலோ, சீட் இபிஸா ஆகிய கார் மாடல்கள் உருவாக்கப்பட்ட அதே கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த புதிய மாடல் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய எம்க்யூபி ஏO கட்டமைப்புக் கொள்கைக்கு மாறி இருப்பதால், காரின் பரிமாண அளவும் சற்றே பெரிதாக மாறி இருக்கிறது. பூட்ரூம் இடவசதி 50 லிட்டர்கள் வரை கூடுதலாக இருக்கும்.

புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கார் மிக வலுவான கட்டமைப்பு மற்றும் பாகங்களுடன் பாதுகாப்பில் மேலும் சிறந்த மாடலாக மாறி இருக்கிறது. இதன்மூலமாக, ஸ்கோடா கார்களின் கட்டமைப்பு வலுவின் திறனை இந்த காரும் பரைசாற்றும்.

புதிய ஸ்கோடா ஃபேபியா காரில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 96 பிஎஸ் பவர் அல்லது 110 பிஎஸ் பவரை வழங்கும் திறனில் அறிமுகம் செய்யப்படும். இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரை வழங்க வல்லதாக இருக்கும். இந்த எஞ்சின்கள் மிக குறைவான மாசு உமிழ்வையும், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும்.

இந்த காரில் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழஙகப்படும். இளம் தலைமுறையினருக்கு மிகச் சிறந்த தேரவாக புதிய ஃபேபியா கார் இருக்கும் என்று ஸகோடா தெரிவிக்கிறது.

இந்தியாவில் மாருதி பலேனோ, ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, இந்த சந்தையில் உள்ள வர்த்தக வளத்தை கருத்தில்கொண்டு, புதிய தலைமுறை ஃபேபியா காரை இந்தியாவில் ஸ்கோடா அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்த கார் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications








