12 மாதங்களில் 75,000 முன்பதிவுகள்!! மஹிந்திரா தாருக்கு தொடர்ந்து குவியும் வாடிக்கையாளர்கள்
கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை தாருக்கான முன்பதிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்களுடன் மஹிந்திரா தெரிவித்துள்ளது. அவற்றையும் இந்த மஹிந்திரா பயணிகள் வாகனத்தின் சிறப்பம்சத்தையும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மஹிந்திரா தாருக்கான வரவேற்பு இப்போது வரையிலும் நல்லப்படியாகவே வருகிறது. இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தற்போது நமக்கு கிடைக்க பெற்றுள்ள அறிக்கையில் மஹிந்திரா சில விபரங்களை தெரிவித்துள்ளது.

முந்தைய தலைமுறையில் இருந்து முற்றிலும் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அடுத்த தலைமுறை தார் வாகனத்திற்கு கடந்த 1 வருடத்தில் சுமார் 75,000 முன்பதிவுகள் நிறைவு பெற்றுள்ளன. இதில் சுமார் 40 சதவீதத்தினர் மில்லினியல்கள், அதாவது தற்சமயம் 27 வயதில் இருந்து 40 வயது வரையில் இருக்கும் 1981இல் இருந்து 1994 வரையில் பிறந்தவர்களே என்று மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யப்பட்டவைகளில் பாதி, அதாவது 50 சதவீதம் ஆட்டோமேட்டிக் வேரியண்ட். 25% முன்பதிவுகள் தாரின் பெட்ரோல் ட்ரிம்-களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.12.78 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கும் மஹிந்திரா தாரின் தற்போதைய விலை அதிகப்பட்சமாக ரூ.15.08 லட்சம் வரையில் உள்ளன. இது எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்.

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தின் விலையினை கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் வரையில் உயர்த்தி இருந்தது. தார் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் வேரியண்ட்களை பொறுத்து ரூ.32,000இல் இருந்து ரூ.92,000 வரையில் அதிகரிக்கப்பட்டு இருந்தன. இதனுடன் ஸ்கார்பியோ, மராஸ்ஸோ மற்றும் எக்ஸ்யூவி300 போன்ற மற்ற மஹிந்திரா கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டு இருந்தன.

இருப்பினும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரமான மஹிந்திரா வாகனம், தார் ஆகும். இது கடந்த 2020 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய மோதல் சோதனையில் ஐந்திற்கு நான்கு மதிப்பெண்களை பெற்று ஆச்சிரியப்படுத்தி இருந்தது. இதனால் புதிய மஹிந்திரா தாரை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வருகிறது.

அதிலும், குறைக்கடத்திகளுக்கு உலகளவில் பெரிய தேவை உருவாகியது. இதன்பின் சொல்லவாக வேண்டும், காத்திருப்பு காலம் 1 வருடம் வரையில் கூட எகிறியது. அதாவது இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் முன்பதிவு செய்தால் 2022இல் தான் வாடிக்கையாளர் டெலிவிரி பெற முடியும் என்கிற சூழலும் உருவானது. தற்போது தாரின் பெரும்பான்மையான ட்ரிம்களை முன்பதிவு செய்வோர் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது.

மொத்தம் 10 வேரியண்ட்களில், 2 விதமான நிறத்தேர்வுகளில் மஹிந்திரா தார் விற்பனை செய்யப்படுகிறது. புதிய தலைமுறை மஹிந்திரா தார் பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனையில் உள்ளது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறன் வரையிலும், 2.2 லிட்டர் டீசல் என்ஜின் 130 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறன் வரையிலும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

இவை இரண்டுடனும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை பெறலாம். இதன் டீசல் வேரியண்ட்களை ரூ.13 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் விலை) இருந்தே வாங்க முடியும். இதற்கிடையில் 5-கதவு மஹிந்திரா தாரை பற்றிய தகவலும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

அதாவது, 2026ஆம் ஆண்டிற்குள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த ஏகப்பட்ட திட்டங்களை மஹிந்திரா வகுத்து வைத்துள்ளது. இதில் 5-கதவு தார் வாகனமும் ஒன்றாம். தற்போதைய தாரில் 3 கதவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதனால் அதிகப்பட்சமாகவே இந்த வாகனத்தில் 4 பேர் மட்டுமே சவுகரியமாக அமரும் நிலை உள்ளது.

எனவே 5-இருக்கை தார் நிச்சயம் குடும்பத்துடன் பயணிக்க விரும்பும் வாடிக்கையாளர்களை கவரும். 5-கதவு மஹிந்திரா தாரின் அறிமுகத்தை 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கிறோம். அடுத்ததாக மஹிந்திரா பிராண்டில் இருந்து முக்கியமான புதிய தலைமுறை ஸ்கார்பியோ அடுத்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5-கதவு தாரின் விலை தற்போதைய தாருடன் ஒப்பிடுகையில் வெறும் ரூ.80,000 அளவில் அதிகமாக நிர்ணயிக்கப்படும் என செய்திகள் கூறுகின்றன. கூடுதல் இருக்கை வசதிகளை பெறுவதால் தற்போதைய தாரை காட்டிலும் 5-கதவு தாரின் நீளம் நிச்சயமாக அதிகமாக இருக்கும். விற்பனையில் 3-கதவு மஹிந்திரா தாருக்கு தற்சமயம் எந்த போட்டியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








