குறைவான விலையில் புதிய கார்... மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு கியா வைத்த செக்... அடுத்த மாதம் அறிமுகம்!
மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு கியா நிறுவனம் செக் வைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடப்பு 2021ம் ஆண்டில் தற்போது வரை கியா நிறுவனம் இந்திய சந்தையில் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் வரப்போகும் 2022ம் ஆண்டிற்கு கியா நிறுவனம் இந்திய சந்தைக்கு ஏகப்பட்ட திட்டங்களை வைத்துள்ளது. இதன்படி இந்திய சந்தைக்கான அடுத்த காரை கியா நிறுவனம் கிட்டத்தட்ட இறுதி செய்து விட்டதை போல் தெரிகிறது.

தற்போதைய நிலையில் செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகிய 3 கார்களை மட்டுமே கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இதில் செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய 2 கார்களும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவை. அதே சமயம் கியா கார்னிவல் காரானது, சொகுசு எம்பிவி ரகத்தை சேர்ந்தது.

இதற்கு அடுத்தபடியாக கியா நிறுவனம் களமிறக்கவுள்ள காரும் கூட எம்பிவி ரகத்தை சேர்ந்ததாகதான் இருக்கும் என தோன்றுகிறது. தற்போதைய நிலையில் KY என்ற குறியீட்டு பெயரில் இந்த எம்பிவி கார் அழைக்கப்பட்டு வருகிறது. கார்னிவல் கார் சொகுசு எம்பிவி ரகத்தை சேர்ந்தது என்பதால், குறைவான எண்ணிக்கையில்தான் விற்பனையாகிறது.

ஆனால் கியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக களமிறக்கவுள்ள எம்பிவி கார் குறைவான விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது அதிக எண்ணிக்கையில் விற்பனையாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் எம்பிவி போன்ற பெரிய வாகனங்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது.

அதை பூர்த்தி செய்யும் வகையில், கியா நிறுவனம் இந்த புத்தம் புதிய எம்பிவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. கியா கார்னிவல் கார் விலை உயர்ந்த ஒன்றாக உள்ளது. இது அதிக விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தராது என்பது கியா நிறுவனத்திற்கும் தெரியும். இது கியா நிறுவனத்தின் திறன்களை வெளிக்காட்டுவதற்கும், பிராண்ட் இமேஜை உயர்த்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு கார்.

ஆனால் கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார், செல்டோஸ் மற்றும் சொனெட் போல விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புத்தம் புதிய எம்பிவி கார் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து 2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதையும் கியா உறுதி செய்துள்ளது.

அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி-மார்ச் இடையிலான காலகட்டத்தில், இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இதுகுறித்து கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான டா-ஜின் பார்க் கூறுகையில், ''2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் எங்களது புதிய தயாரிப்பான KY அறிமுகமாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்'' என்றார்.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த புதிய காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வும் வழங்கப்படலாம். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார்களுடன் கியா நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு போட்டியிடும்.

தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்களாக மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகியவை உள்ளன. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தாலும் அது சற்று விலை உயர்ந்த தயாரிப்பாக உள்ளது. அதேபோன்ற நிலைதான் கியா கார்னிவல் காருக்கும் இருந்து வருகிறது.

ஆனால் கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்கு ஏற்ற வகையில் அதிநவீன வசதிகளையும், ஸ்டைலான தோற்றத்தையும் இந்த புதிய எம்பிவி கார் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறைய உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக கியா நிறுவனத்தின் இந்த புதிய எம்பிவி கார் இருக்கும்.

ஆனால் என்ன விலையில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது போன்ற தகவல்கள் எதுவும் தற்போதைக்கு கிடைக்கவில்லை. டிசம்பர் மாதம் இந்த கார் குறித்த தகவல்கள் ஓரளவிற்கு வெளியாகும். அதை தொடர்ந்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது விலை உள்பட அனைத்து தகவல்களும் நமக்கு முழுமையாக தெரியவரும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








