சூப்பர்... நெடுஞ்சாலைகளில் ஒன்றிய அரசு செய்ய போகும் நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!
நெடுஞ்சாலைகளில் ஒன்றிய அரசு நல்ல காரியம் ஒன்றை செய்ய போகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னை வெகுவாக குறையும். அத்துடன் இதன் மூலம் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவையும் குறைக்கலாம். ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் தயங்குகின்றனர்.

இந்த பிரச்னையை சரி செய்வதற்கு ஒன்றிய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்புகளை அதிகரிக்கும் பணிகளில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈடுபட்டு வருவதாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தற்போது தெரிவித்துள்ளார்.

தற்போது பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளதால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு பலர் விரும்புகின்றனர். ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மீண்டும் பெட்ரோல், டீசல் வாகனங்களையே பயன்படுத்தும் நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. இத்தகைய நபர்களுக்கு, அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ள தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், ''எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது ஈடுபட்டு வருகிறது'' என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உயர்ந்து வருவது ஊக்கம் அளிப்பதாக உள்ளது. அத்துடன் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

மேலும் அதிக காலம் உழைக்க கூடிய, குறைவான விலை கொண்ட மற்றும் அதிக திறன் மிக்க பேட்டரிகள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சிகள் தற்போதைய சூழலில் தேவை எனவும் அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தினார். மேலும் ஆட்டோமொபைல் துறை குறித்தும் அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார்.

கோவிட்-19 பிரச்னை காரணமாக ஆட்டோமொபைல் துறை சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாகவும், ஆனால் தற்போது சரிவில் இருந்து மீண்டு வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பண்டிகை காலம் நெருங்கி வருவதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், ''பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோல் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் உற்பத்தி செய்வதற்காக, உள்ளூரை சேர்ந்த தொழில் முனைவோர்கள், பெரிய ஆலைகளை அமைப்பதும் மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்றார்.

அமைச்சர் நிதின் கட்காரி குறிப்பிட்டதை போலவே, பல்வேறு சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்து கொண்டுதான் உள்ளன. சமீபத்தில் இந்திய சந்தையில் நுழைந்து, பிரம்மாண்ட வெற்றியை சந்தித்த நிறுவனங்களுக்கு எம்ஜி மோட்டார் மற்றும் கியா ஆகிய நிறுவனங்களை உதாரணமாக கூறலாம்.

அதே நேரத்தில் ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் இந்திய சந்தையில் தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறி கொண்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. இதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சந்தையை சரியாக புரிந்து கொள்ளாதது, தவறான வியாபார யுக்திகள் ஆகியவை முக்கியமான காரணங்கள் என்றாலும், அரசின் விரி விதிப்பு முறைகளும் ஒரு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை ஒன்றிய அரசு சரி செய்ய வேண்டும் என்பது ஆட்டோமொபைல் துறையின் கோரிக்கையாக உள்ளது. ஏனெனில் இந்திய சந்தையில் மேலும் ஒரு சில நிறுவனங்கள் பெரும் தடுமாற்றத்தில் இருக்கின்றன. அவையும் இந்தியாவை விட்டு வெளியேறி விடுமோ? என்ற அச்சம் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications








