இந்தியாவில் விற்பனையிலேயே இல்லாத ஒரு காரை கபில் தேவிற்கு பரிசளித்த நிஸான்... காரணம் என்னனு தெரியுமா?
கபில் தேவிற்கு நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிற்கு கிரிக்கெட் உலக கோப்பையை வென்று கொடுத்த தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான கபில் தேவிற்கு நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் காரை (Nissan Leaf EV) பரிசாக வழங்கியுள்ளதாக நிஸான் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. உலக எலெக்ட்ரிக் வாகன தினத்தை முன்னிட்டு, இந்த எலெக்ட்ரிக் காரை கபில் தேவிற்கு பரிசாக வழங்கியதாக நிஸான் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிஸான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவத்சவா, நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் காரின் சாவியை, கபில் தேவ் வசம் ஒப்படைத்தார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலை தள பக்கங்களில் நிஸான் இந்தியா நிறுவனம் பகிர்ந்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களும், எலெக்ட்ரிக் கார் ரசிகர்களும் அந்த புகைப்படத்தை ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் முயற்சிகளை நிஸான் நிறுவனம் தொடர்ந்து மேற்கொள்ளும் என ராகேஷ் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். கபில் தேவிற்கு தற்போது நிஸான் இந்தியா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ள நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் கார், உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் உலக அளவில் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் கார்களில் நிஸான் லீஃப் காரும் ஒன்றாகும். ஆனால் நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும் நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே நிஸான் இந்தியா நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மிக நீண்ட காலமாக நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் காரை எதிர்பார்த்து கொண்டுள்ளனர். ஆனால் இந்த கார் இன்னும் இந்திய சந்தைக்கு வரவில்லை. எனினும் தற்போது கபில் தேவிற்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளதால், நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் கார் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது கூடிய விரைவில் நடக்கும்பட்சத்தில், நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் காருக்காக காத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் பெரு மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய தலைமுறை நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் காரில், 110 kW எலெக்ட்ரிக் மோட்டாரும், 40 kWh பேட்டரி தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இது அதிகபட்சமாக 147 ஹெச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் காரின், அதிக செயல்திறன் மிக்க வேரியண்ட்டையும் நிஸான் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதில், 62 kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார் நிலையாக வளர்ச்சியடைந்து வருகிறது.

டாடா, எம்ஜி மோட்டார், ஹூண்டாய் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. இதில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முன்னணியில் உள்ளது. ஏனெனில் அந்த நிறுவனத்தின் நெக்ஸான்தான், இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் கார் ஆகும்.

ஏற்கனவே விற்பனையில் உள்ள வழக்கமான ஐசி இன்ஜின் நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது. இந்த வரிசையில் 2021 டிகோர் எலெக்ட்ரிக் காரையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் வளர்ச்சியடைந்து வரும் எலெக்ட்ரிக் கார் 'டிரெண்ட்' நிஸான் நிறுவனத்தையும் ஊக்கப்படுத்துவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூடிய விரைவில் நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் கார் இந்திய மக்களுக்கும் விற்பனைக்கு கிடைக்கலாம். நிஸான் லீஃப் தவிர இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாவதற்கு தயாராகி வருகின்றன.

இதில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் ஆகியவை நடுத்தர வர்க்க மக்களையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமல்லாது, ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் இந்திய சந்தையில் சமீப காலமாக தொடர்ந்து விற்பனைக்கு அறிமுகமாகி வருகின்றன என்பது மகிழ்ச்சியான விஷயம்.


Click it and Unblock the Notifications








