டி20 உலகக்கோப்பை போட்டியில், மைதானத்தில் நிறுத்தப்பட உள்ள நிஸான் மேக்னைட்!! ஸ்பான்சராக தேர்வு
2021 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஸ்பான்சர்களுள் ஒன்றாக நிஸான் மேக்னைட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்தும், இந்த நிஸான் காரை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரசிகர்களுக்கு சிக்ஸர் மழை பொழியவுள்ள 2021ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்திலும், ஓமனிலும் நடைபெறவுள்ளது. இதில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள போட்டிகளின் போது மைதானத்தில் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக நிஸான் மேக்னைட் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக நிஸான் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நிஸான் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் சினான் ஓஸ்கோக் பேசுகையில், ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை போட்டி தற்சமயம் இந்தியாவில் ரசிகர்கள் பலரால் எதிர்பார்க்கப்படும் ஒன்று. இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்படும், உலகளவில் தேவையான எஸ்யூவி காரான மேக்னைட் ஸ்பான்சராக அறிவிக்கப்பட்டிருப்பதில் நிஸான் இந்தியா நிறுவனம் பெருமை கொள்கிறது.

தற்போதைய சவாலான சூழலில், ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை போட்டி அனைவருக்கும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும், பொழுதுப்போக்கையும் தரும் என நாங்கள் நம்புகிறோம் என்றார். இதற்காக நிஸான் இந்தியா நிறுவனம் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரும், முதன்முதலில் கிரிக்கெட்டில் உலகக்கோப்பை பெற்று தந்தவருமான கபில் தேவ் உடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.

கபில் தேவ் கடந்த ஆண்டில் கொரோனா அலை இந்தியாவில் பரவ துவங்கிய மிகவும் இக்கட்டான காலக்கட்டத்தில் நிஸான் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த பொது விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பிரச்சாரங்களில் ஈடுப்பட்டார். இவ்வாறு ஐசிசி நடத்தும் சர்வதேச போட்டிகள் பெரும்பான்மையானவற்றில் தவறாமல் நிஸான் கலந்து கொண்டு வருகிறது.

மேலும் நிஸான் ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடன் கடந்த 2016ல் இருந்து அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இருந்து வருகிறது. விரைவில் நடக்கவுள்ள 2021 ஆண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் நிறுத்தப்படுவது மூலம் நிஸான் மேக்னைட்டின் பிரபலம் இன்னும் அதிகரிக்கும்.

ஏற்கனவே மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு தான் கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பரில் நிஸான் மேக்னைட் இந்திய சந்தையில் அறிமுகமானது. அப்போதில் இருந்து இதுவரையில் 60,000 முன்பதிவுகள் மேக்னைட்டின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிஸான் தெரிவிக்கிறது.

இந்தியாவின் மலிவான சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக மேக்னைட் விளங்குகிறது. அதேபோல் பராமரிப்பு செலவையும் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் மிக குறைவாகவே கொண்டுள்ளது. இதன் பராமரிப்பு செலவு முதல் 50,000கிமீ-க்கு 30 பைசா/கிமீ என நிஸான் நிறுவனம் தெரிவிக்கிறது.

நிஸான் மேக்னைட்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 2 வருட/ 50,000 கிமீ நிலையான உத்தரவாதத்தை நிஸான் வழங்கி வருகிறது. இதனை 5 வருட/ 1 லட்ச கிமீ ஆகவும் வாடிக்கையாளர்கள் மாற்றி கொள்ளலாம். ஆனால் இதற்கு கூடுதல் தொகையினை செலுத்த வேண்டி இருக்கும்.

நிஸான் சர்வீஸ் ஹப் அல்லது நிஸான் கனெக்ட் வழியாக, நிஸான் சேவை கட்டண கால்குலேட்டர் மூலம் வாடிக்கையாளர்கள் தேவைப்படும் சேவைகளை தேர்வு செய்து, அதற்கான கட்டணங்களை ஆன்லைனில் சரிப்பார்த்து கொள்ளலாம். அத்துடன் சுமார் 1,500 இந்திய நகரங்களில் பயணத்தின்போது தேவைப்படும் உதவிகளை 24/7 நேரமும் நிஸான் நிறுவனம் வழங்குகிறது.

மேக்னைட் உண்மையில் இந்திய சந்தையில் ஜப்பானிய நிஸான் நிறுவனத்தின் வெற்றி மாடல் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் 2020 ஆகஸ்ட்டை காட்டிலும் கடந்த ஆகஸ்ட் மாததில் சுமார் நான்கு மடங்கு அதிக எண்ணிக்கையிலான கார்களை நிஸான் விற்பனை செய்துள்ளது. இதற்கு மேக்னைட்டின் பங்கு தான் மிக முக்கியமானது.

மேக்னைட்டில் இரண்டு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒன்றான 1.0 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட், இன்லைன்-3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 72 பிஎஸ் மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. மற்றொரு 1.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 100 பிஎஸ் மற்றும் 160 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








