ரெண்டு வருஷத்துல பெட்ரோல் வாகனங்களுக்கு இணையான விலையில் இ-வாகனங்கள் கிடைக்கும்... நிதின் கட்கரி உறுதி!
இரண்டு வருஷத்துல மின்சார வாகனங்கள், பெட்ரோல் வாகனங்களுக்கு இணையான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 'நெடுஞ்சாலைகள், போக்குவரத்து துறை மற்றும் தளவாடங்களில் முதலீடு வாய்ப்புகள்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது. இதில், அரசு சார்பின் முக்கிய அதிகாரிகள் பலர் பங்கு பெற்றனர். ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியும் கலந்துக் கொண்டார்.

மேலும், அக்கூட்டத்தில் பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துக் கொண்டார். மின் வாகன பிரியர்களைக் கவரக் கூடிய ஓர் தகவலை இந்த கூட்டத்தில் நடைபெற்ற உரையின் வாயிலாக அவர் பகிர்ந்துக் கொண்டார். அது, "இந்தியாவில் இரண்டு ஆண்டுகளில் மின்சார வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போன்று மிக குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்" என கூறினார்.

இதற்கான பணியில் தங்களின் அரசு மிக தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களைக் காட்டிலும் மின்சார வாகனங்கள் நீண்ட காலத்திற்கு குறைந்த பராமரிப்பு செலவை வழங்கக் கூடியவையாகக் காட்சியளிக்கின்றன. ஆனால், அவற்றின் ஆரம்ப விலை பல மடங்கு அதிகம்.

இதன் விளைவாக வாங்குவோர் தடுக்கப்படுகின்றனர். இந்த நிலையைக் களைக்கும் பொருட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை இன்னும் இரண்டு ஆண்டுகளில் எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கு இணையான விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களைக் கொண்டு வர இருக்கின்றன. இதனையே ஒன்றிய அமைச்சர் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பகிர்ந்துக் கொண்டார்.

தொடர்ந்து, "பயணிகள் வாகனங்கள் மட்டுமல்லாது எதிர்காலத்தில் லாரிகளும் மின்சார திறனில் இயங்க வேண்டும் என்பதை அரசாங்கம் எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாக" அவர் கூறினார். இதுமட்டுமின்றி, அமைச்சர் வெளியிட்ட தகவலின் வாயிலாக அரசு ஃப்யூவல் ஃப்ளெக்ஸ் (Flexible fuel vehicles) வாகனங்களையும் கட்டாயமாக்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களிலும் ஃப்யூவல் ஃப்ளெக்ஸ் எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் இந்த பணியில் களமிறங்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ஃப்யூவல் ஃப்ளெக்ஸ் வாகனம் எத்தனாலை முக்கிய எரிபொருளாகக் கொண்டு இயங்கக் கூடியவை ஆகும்.

தற்போது விற்பனையில் இருக்கும் எரிபொருள்களில் எத்தனாலின் அளவு என்பது 100க்கு பத்து அல்லது அதற்கும் குறைவான அளவிலேயே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், ஃப்யூவல் ஃப்ளெக்ஸ் ஆயிலில் 80 சதவீதம் அல்லது 90 சதவீதம் வரை எத்தனாலே பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மீதமுள்ள சதவீத அளவிலேயே பெட்ரோலின் அளவு பங்கு பெறும்.

இதன் வாயிலாக பெருமளவிலான மாசுபாட்டைக் குறைக்க முடியும் என அரசு நம்புகின்று. இதுமட்டுமின்றி, தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் காட்டிலும் பல மடங்கு குறைவான விலையில் இது விற்பனைக்கு கிடைக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃப்யூவல் ஃப்ளெக்ஸ் எஞ்ஜினை அடுத்து நாடு முழுவதும் ஃப்யூவல் ஃப்ளெக்ஸ் ஆயில் (bio-LNG மற்றும் bio-CNG) விற்பனையகத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருவதாக நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்தியாவில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அறிமுகம் செய்யப்பட்டதே ஃபேம்2 திட்டம். இத்திட்டத்தின் வாயிலாக மின் வாகனங்களுக்கு சிறப்பு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இத்துடன், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சியிலும் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகின்றது.

அரசின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் மின் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, 2021ம் ஆண்டில் மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல மடங்கு வளர்ச்சியைச் சந்தித்திருக்கின்றன. இந்த நிலை தொடர்ந்து பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசுபாடுக் குறை வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். இது எதிர்காலத்தில் நிச்சயம் நிறைவேறும் என்பதை தற்போது மின் வாகனங்களுக்குக் கிடைக்கத் தொடங்கியிருக்கும் விற்பனை விகிதம் தெரியப்படுத்துகின்றது.


Click it and Unblock the Notifications








