என்ன தங்க மகன் நீரஜ் சோப்ரா இந்த காரை வாங்கிட்டாரா?.. இது இப்போ இந்தியால விற்பனையிலேயே இல்ல!
இந்தியாவின் தங்க பதக்க தாகத்தை தீர்த்து வைத்த தங்க மகன் நீரஜ் சோப்ரா புதிதாக ஓர் அதிக விலைக் கொண்ட காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவிற்கு ஒரு தங்க பதக்கமாவது கிடைத்து விடாதா என அனைவரும் ஏங்கிக் கொண்டிருந்த வேலையில், அனைவரின் ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் தீர்த்து வைக்கும் வகையில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் சக வீரர்களை பின்னுக்கு தள்ளி இந்தியாவிற்கான தங்க பதக்கத்தை வென்று கொடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக ஒட்டுமொத்த நாடே அவரை தங்க மகன் என்று அழைக்க தொடங்கியது. இத்துடன், முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கி, ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் வரை அவருக்கு பரிசுகளை அறிவித்தன. பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, அதன் புதுமுக அறிமுகமான மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) எஸ்யூவி ரக காரை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தகுந்தது.

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி700 காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. புக்கிங் பணிகள் தொடங்கப்பட்ட முதல் நாள் முதல் ஒரு மணி நேரத்திற்குள் 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்குகளை அக்கார் பெற்றது. இதேபோல் இரண்டாவது 2 மணி நேரம் 5 நிமிடங்களுக்கு உள்ளாக மற்றுமொரு 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கை அது பெற்றது. இத்தகை அமோக வரவேற்பைப் பெற்று வரும் காரையே தங்கத்தை வென்ற நீரஜ் சோப்ராவிற்கு மஹிந்திரா நிறுவனம் பரிசாக அறிவித்தது.

ஆகையால், அனைவரும் நீரஜ் சோப்ரா மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரிலேயே இனி வலம் வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் அவருக்கான புதிய காரை ஏற்கனவே வாங்கிவிட்டதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீல நிறத்திலான ஃபோர்டு மஸ்டாங் (Ford Mustang) காரை அவர் மிக மிக சமீபத்தில் வாங்கியிருக்கின்றார்.

அந்த காரில் அவர் செல்வது போன்ற வீடியோக்கள் தற்போது யுட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஃபோர்டு நிறுவனம் அனைத்து வகையான கார் விற்பனையையும் இந்தியாவில் நிறுத்திவிட்டது. அதே நேரத்தில் மிக விரைவில் மஸ்டாங் மற்றும் என்டீயோவர் போன்ற குறிப்பிட்ட சில கார் மாடல்களை மட்டும் சிபியூ வாயிலாக இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இருப்பினும், நிறுவனத்தின் கீழே எந்தவொரு வாகனமும் இந்தியாவில் விற்பனைச் செய்யப்படவில்லை என்பதே தற்போது உண்மை நிலவரம் ஆகும்.

ஆகையால், நீரஜ் சோப்ரா வாங்கியிருக்கும் ஃபோர்டு மஸ்டாங், பயன்படுத்திய கார்கள் சந்தையில் இருந்து வாங்கப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. நீரஜ் சோப்ரா ஹர்யானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அதே நேரத்தில் அவருடன் காட்சியளித்திருக்கும் மஸ்டாங் மஹாராஷ்டிரா மாநில பதிவெண்ணில் காட்சியளிக்கின்றது. இதை வைத்தும் அது செகண்ட் ஹேண்ட் கார் என்று யூகிக்கப்படுகின்றது.

ஃபோர்டு மஸ்டாங் காருக்கு உலகளவில் ரசிகர்கள் அதிகம். இந்தியாவிலும் இதே நிலைதான் தென்படுகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் விற்பனையில் இருந்தபோது மஸ்டாங் கார் மாடலின் குறிப்பிட்ட அலகுகளை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு அறிவித்தது. அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்தன. அந்தளவிற்கு மிக அமோகமான வரவேற்பை பெற்ற காராக மஸ்டாங் இருக்கின்றது.

தொழிலதிபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. ரிஷப் பந்த், முகமது சிராஜ், ஆகாஷ்தீப் நாத் மற்றும் ரோஹித் ஷெட்டி உள்ளிட்டோர் மஸ்டாங் காரை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் வரிசையில் தற்போது நீரஜ் சோப்ராவும் இணைந்திருக்கின்றார்.

ஃபோர்டு நிறுவனம் இக்காரை ஒரே ஒரு எஞ்ஜின் தேர்வில் மட்டுமே இந்தியாவில் விற்பனைச் செய்தது. 5.0 லிட்டர் வி8 நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலேயே அது வழங்கப்பட்டது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 395 பிஎச்பி மற்றும் 515 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் உடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்திய மஸ்டாங்கைக் காட்டிலும் சர்வதேச சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் மஸ்டங் மாடல் அதிக ஆற்றல்மிக்கதாக காட்சியளிக்கின்றது.

ஃபோர்டு மஸ்டாங் இந்தியாவில் ரூ. 75 லட்சத்திற்கும் அதிகமான விலையிலேயே விற்பனைக்குக் கிடைத்து வந்தது. ஆனால், நீரஜ் சோப்ரா எவ்வளவு செலவு செய்து தனக்கான மஸ்டாங்கை வாங்கியிருக்கின்றார் என்பது தெரியவில்லை. செகண்ட் ஹேண்ட் சந்தையிலும் இந்த கார் மிக உயரிய விலைக் கொண்ட காராக விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

நீரஜ் சோப்ரா மிக விரைவில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி700 காரில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா நிறுவனம் இவருக்கு கோல்டு எடிசன் எனும் சிறப்பு பதிப்பை வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது. இது மிட்-நைட் கருப்பு நிற கோல்டு அலங்காரம் கொண்ட வாகனமாகும். அடாஸ், தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பல சிறப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் இக்கார் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








