சொகுசு கார் மோதி இரு போலீஸார் பலி... சென்னையில் அரங்கேறிய கோர சம்பவம்... என்ன நடந்தது?
சொகுசு கார் மோதியதில் இரு காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்று மோதியதில் ஆயுதமேந்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த இரு கான்ஸ்டபிள்கள் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு போலீஸாரும் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போதே இந்த கோர விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. விபத்திற்கு சொகுசு கார் கட்டுப்படுத்த முடியாத அளவில் அதி-வேகத்தில் வந்ததே காரணம் என கூறப்படுகின்றது.

இருசக்கர வாகனத்தில் பயணித்த இரு காவலர்களும் சம்பவத்தின்போது தலைக் கவசம் அணிந்திருந்ததாக கூறப்படுகின்றது. இருப்பினும், அதி வேகத்தில் கார் வந்து மோதியதன் காரணத்தினால் இருவரும் பரிதாபமாக பலியாகியிருக்கின்றனர். கார்த்திக் (34) மற்றும் ரவீந்திரன் (32) ஆகிய இருவர் காவலர்களே இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள்.

இவர்களில் ரவீந்திரன் என்கிற காவலரே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்திருக்கின்றார். பலத்த காயங்களின் காரணமாக விபத்து நடைபெற்ற சம்ப இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார். மேலும், கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட கார்த்திக், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டநிலையில் அவரும் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார்.

இருவரும் தலைக் கவசம் அணிந்திருந்த நிலையிலும் உயிரிழந்திருப்பது காவல்துறையில் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடை அடுத்துள்ள முகப்பேர் கிழக்கு பகுதியிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. போலீஸார் இருவரும் பணிக்கு சென்றுக் கொண்டிருந்தபோதே இந்த கோர விபத்து சம்பவம் நடைபெற்றிருக்கின்றது.

சொகுசு காரை இயக்கி வந்தவர் எஸ். அம்ருத் (25) என கண்டறியப்பட்டுள்ளது. தனது நண்பருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த இவர் மீண்டும் நண்பர்களுடன் வீட்டிற்கு திரும்பியிருக்கின்றார். அதி காலை என்பதால் சற்று கூடுதல் வேகத்தில் காரை ஓட்டியிருக்கின்றார் அம்ருத். அப்போதே போலீஸார் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது காரைக் கட்டுப்படுத்த முடியாமல் மோதினார்.
இச்சம்பவம்குறித்து வழக்கு பதிந்த முகப்பேர் போலீஸார் ஐபிசி பிரிவு 304 (ii)ன் கீழ் வழக்கு பதிந்திருக்கின்றனர். தொடர்ந்து, காரை ஓட்டியவர் மற்றும் காருக்குள் பயணித்தவர்கள் சிலரை சிறை பிடித்திருக்கின்றனர். சம்பவத்தின்போது இளைஞர் அம்ருத் மது அருந்தவில்லை என்பதை ஆய்வின்மூலம் போலீஸார் கண்டறிந்திருக்கின்றனர்.

ஆகையால், இவ்விபத்திற்கு மது போதை காரணமில்லை என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. அதேசமயம், அளவிடப்பட்ட வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் காரை இயக்கியதே இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்பதை அவர்கள் கண்டறிந்திருக்கின்றனர். எனவேதான் போலீஸார் தலைக் கவசம் அணிந்திருந்தும் கடுமையான காயங்களை அடைந்து, உயிரிழந்திருக்கின்றனர்.

இதுபோன்ற காரணத்தினாலயே அதிக வேகத்தில் பயணிக்கக் கூடாது என போக்குவரத்து விதிகள் கூறுகின்றன. ஆனால், இதனை வாகன ஓட்டிகள் துளியளவும் கடைப்பிடிப்பதில்லை. மேலும், இந்த மாதமானது, தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஆகும். இந்த மாதத்தில் இம்மாதிரியான கோர விபத்து நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், பணிக்குச் சென்றுக் கொண்டிருந்த போலீஸார் இறந்திருப்பது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டதே இந்த 'தேசிய சாலை பாதுகாப்பு மாதம்' ஆகும். இந்த பிரசாரத்தின் மூலம் பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் விழிப்புணர்வுகள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








