விரைவில் அறிமுகமாகிறது இந்திய தயாரிப்பு மின்சார கார்... டாடா டிகோர் இவி-க்கே டஃப் கொடுக்கும் மலிவு விலையில்!!
டாடா டிகோர் மின்சார காருக்கே டஃப் கொடுக்கும் வகையில் மற்றுமொரு இந்திய தயாரிப்பு விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவலை இப்பதிவில் காணலாம்.

இந்தியாவின் மின் வாகன சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் ஓர் உள்நாட்டு தயாரிப்பு விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓசோன் எனும் ஆரம்ப நிலை நிறுவனமே அதன் முதல் மின்சார காரை நாட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கின்றது. நடப்பாண்டிற்குள் இந்த புதுமுக காரின் அறிமுகம் அரங்கேறிவிடும் என்ற தகவலே தற்போது வெளியாகியுள்ளன.

ஓசோன் அலைஸ் எனும் பெயரில் விரைவில் அறிமுகமாக இருக்கும் இந்த மின்சார கார், தற்போதைய மின் வாகனங்கள் சந்தித்து வரும் மிக பெரியளவிலான சிக்கல்களை தவிடு பொடியாக்கி களமிறங்க இருக்கின்றது. அதாவது, முழுமையான சார்ஜை எட்ட அதிக நேரம் காத்திருக்க வேண்டும் என்ற நிலை மற்றும் மிக உயர்ந்த விலை என்ற பல்வேறு தடை கற்கலை உடைத்தெறியும் வகையில் இக்கார் அறிமுகமாக உள்ளது.

அலைஸ் அர்பன் மின்சார காரின் டீசர் படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் மின்சார கார் அறிமுகமாக உள்ளநிலையில் மக்களைக் கவரும் நோக்கில் இப்படம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த படம் மின்சார கார் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அலைஸ் அர்பன் மின்சார கார் ஓர் காம்பேக்ட் ரக எலெக்ட்ரிக் வாகனம் என்பதையே தற்போது வெளியாகியிருக்கும் டீசர் படங்களே உறுதிப்படுத்தியுள்ளன. இதன் மூலமே, இக்காரின் ஏரோடைனமிக் டிசன் பற்றிய தகவலும் தெரிய வந்திருக்கின்றது. தொடர்ந்து இக்காரில் என்ன டிசைன் தாத்தபரியத்தில் எல்இடி ஹெட்லேம்ப்கள் இடம்பெற இருக்கின்றன என்பதும் தெரியவந்திருக்கின்றது.

தற்போதைய சொகுசு கார்களில் இடம்பெறுவதைப் போல் ஹெட்லேம்பை ஹைலைட் செய்து காட்டும் வகையில் 'ட' வடிவத்திலான டிஆஎர்எல் மற்றும் க்ரில்லின் மையப்பகுதியில் லோகோ ஆகியவை இடம்பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த காரின் ரேஞ்ஜ் மற்றும் பேட்டரி திறன் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

இருப்பினும், இக்கார் அதிகபட்சமாக 150 கிமீ ரேஞ்ஜ் மற்றும் மணிக்கு 70 கிமீ வேகம் ஆகிய திறன்களுடன் விற்பனைக்கு வரவிருப்பதாக ரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரும் நுகரும் நோக்கில் குறைந்த விலையில் இக்காரை களமிறக்க வேண்டும் என்பதற்காக இந்த குறைந்த ரேஞ்ஜ் மற்றும் வேகத்திறனில் இக்கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

டாடா நிறுவனத்தின் டிகோர் மின்சார காரே தற்போதைய இந்திய மின் வாகன சந்தையில் மிக குறைந்த விலைக் கொண்ட எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இக்கார் பிரத்யேகமாக வர்த்தக துறை பிரிவில் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ரூ. 9.58 லட்சம் தொடங்கி ரூ. 9.90 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.
இதைவிட குறைந்த விலையிலேயே புதிய ஓசோன் அலைஸ் அர்பன் மின்சார கார் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், என்ன விலையில் விற்பனைக்கு வரும் என உறுதியாக கூற முடியவில்லை.


Click it and Unblock the Notifications








