முகம் தெரியாத நோயாளிகளுக்காக சொந்த காரை ஆக்ஸிஜன் வாகனமாக மாற்றிய கணவன்-மனைவி... நெகிழ்ச்சி சம்பவத்தின் ஸ்டோரி!
நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக தங்களின் சொந்த வாகனத்தை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஆக்ஸிஜன் வாகனமாக மாற்றியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் யார் என்பதை பேரிடர் காலங்களே நமக்கு உணர்த்துகின்றன. எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி பிறர் நலனுக்காக உழைக்கும் இவர்கள் சிலருக்கு கடவுளாக மாறிவிடுகின்றனர். அப்படிதான் கோவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாகி இருக்கும் இந்த காலத்தில் நூற்றுக் கணக்கான மக்களுக்கு தெய்வமாக மாறியிருக்கின்றார் பாட்னாவைச் சேர்ந்த கவுரவ் ராய்.

இவர் ஐசியூ வார்டுகளில் ஆக்சிஜனுக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி ஆக்சிஜனை வழங்கி வருகின்றார். இதற்காக தனது சொந்த வாகனமான மாருதி சுசுகி வேகன்ஆர் காரையே ஆக்சிஜன் எடுத்து செல்லும் வாகனமாக மாற்றியிருக்கின்றார்.

இந்த தனித்துவமான சேவையின் காரணமாக இவரை பலர் தற்போது 'ஆக்சிஜன் மேன்' என்று அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வரும்நிலையில் ஏழை-எளிய மக்களுக்கு உதவும் வகையில் கவுரவ் ராய் ஆக்சிஜன்களை வழங்கி வருகின்றார்.

ஆரம்பத்தில் வெறும் 10 சிலிண்டர்களுடன் மட்டுமே இச்சேவையை தொடங்கியிருக்கின்றார் கவுரவ் ராய். ஆனால், இப்போது அவரிடத்தில் 254க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் உள்ளன. இவரின் மகத்துவமான உயிர் காக்கும் சேவையை கண்டு நண்பர்கள் மற்றும் தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் சில 200க்கும் அதிகமான சிலிண்டர்களை வழங்கியிருக்கின்றன.

இதுதவிர, ஒரு சிலர் தங்களால் இயன்ற நிதியுதவியையும் செய்து வருகின்றனர். இருப்பினும் சொந்த பணம் ரூ. 3.15 லட்சம் வரையில் செலவு செய்திருக்கின்றார் கவுரவ் ராய். மேலும், ரூ. 6 லட்சம் வரை தனது நண்பர்கள் மற்றும் முகப்புத்தகம் வாயிலாக அவர் பெற்றிருக்கின்றார். இருப்பினும், இந்த இச்சேவையை எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி, குறிப்பாக இலவசமாக அவர் செய்து வருகின்றார்.

மிக அத்தியாவசியம் தேவை உள்ள நபர்களுக்கே முன்னுரிமை வழங்கி ஆக்சிஜன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, சில மாவட்ட மருத்துவமனைகளில் அங்கேயே சிலிண்டர்களைப் பொருத்தி ஆக்சிஜனை கவுரவ் வழங்கி வருகின்றார். அந்தவகையில், இதுவரை 191 ஆக்சிஜன்களை அவர் கடந்த பத்து நாட்களில் பொது மருத்துவமனைகளில் இன்ஸ்டால் செய்திருக்கின்றார்.

மேலும், தன்னுடைய கார்களில் இருக்கும் சிலிண்டர்களைக் கொண்டும் ஆக்சிஜனை நோயாளிகளக்கு அவர் வழங்கி வருகின்றார். ஆக்சிஜன் மட்டுமின்றி தேவைப்படுவோர்க்கு ஆக்சிஜன் ஏற்றம் செய்யக்கூடிய மாஸ்க்கையும் வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தொடர்ந்து, நோயாளிக்கு எவ்வாறு ஆக்சிஜன் சிலிண்டர்களை கையாள வேண்டும் என்ற அறிவுரையையும் வழங்கி வருகின்றார். இந்த மாதிரியான சேவை மனப்பான்மை கவுரவ் ராயிற்கு எங்கிருந்து வந்தது என்று உங்களுக்கு கேட்க தோன்றலாம்.
கோவிட் 19 வைரஸ் பரவல் ஆரம்பித்தபோது, அதாவது, வைரஸ் பரவல் முதல் அலையின்போது இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் இந்த கவுரவ் ராய். அரசு பொது மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் படி கட்டுக்கு அருகே இவர் கிடத்தப்பட்டார்.

அந்த நேரத்தில் படுக்கையறை மட்டுமின்றி ஆக்சிஜன் பற்றாக்குறையும் மிக அதிக அளவில் தென்பட்டது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் மிக அதிகளவு துயரத்திற்கு கவுரவ் ராய் ஆளானார். இந்த நிலை பிற மக்களுக்கு வரக் கூடாது என்று எண்ணியே கவுரவ் ராயும், அவரது மனைவியும் உயிர்காக்கும் உன்னத சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆமாங்க, இந்த உன்னத பணியில் தான் மட்டுமின்றி தன்னுடைய மனைவியையும் அவர் ஈடுபடுத்தி வருகின்றார். இவர்கள் இருவரும் இணைந்தே ஆக்சிஜன் தேவையுள்ள மக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி வருகின்றனர். இப்பணியை தங்களின் சொந்த காரான வேகன்ஆர் வாகனத்தை மையமாகக் கொண்டே செய்து வருகின்றனர்.

இந்தியாவில் மாருதி சுசுகி வேகன்ஆர் கார் ரூ. 4,80,500 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை மாடலின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையாகும். 1.0லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.0 லிட்டர் எஸ்-சிஎன்ஜி எஞ்ஜின் ஆகிய மூன்று விதமான மோட்டார் தேர்வில் வேகன்ஆர் கிடைத்து வருகின்றது. விரைவில் இந்த மாடலில் மின்சார காரையும் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது மாருதி.


Click it and Unblock the Notifications








