இதைதான் எதிர்பாத்துகிட்டு இருந்தோம்... ஒன்றிய அரசு செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!
இந்தியாவில் குண்டும், குழியுமான சாலைகளால் நடைபெறும் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த 2020ம் ஆண்டு குண்டும், குழியுமான சாலைகள் காரணமாக 3,564 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டு இந்த எண்ணிக்கை இதை விட மிகவும் அதிகமாக இருந்தது. அப்போது 4,775 சாலை விபத்துக்களுக்கு குண்டும், குழியுமான சாலைகள் காரணமாக இருந்தன.

நெடுஞ்சாலைகளை மோசமாக பராமரித்ததன் காரணமாக எத்தனை சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன என தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஜெயதேவ் காலா எழுப்பிய கேள்விக்கு, பாராளுமன்றத்தில் இந்த பதில் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் சாலை விபத்துக்களுக்கு ஏராளமான காரணங்களையும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி மோசமான வெளிச்சம், மோசமான வானிலை, மோசமான சாலைகள், அதிவேகம், ஓட்டுனரின் தவறுகள், ஓவர்லோடு, வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பயன்படுத்துதல், வாகனங்களில் ஏற்படும் குறைபாடுகள், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சிகப்பு விளக்குகளை மீறி செல்வது, ஓவர்டேக் மற்றும் ராங்-சைடு டிரைவிங் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன.

இதற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 2020ம் ஆண்டில் குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த 2016ம் ஆண்டு மோசமான சாலைகள் காரணமாக 6,424 சாலை விபத்துக்கள் நடைபெற்றிருந்தன.

அதே நேரத்தில் கடந்த 2017ம் ஆண்டு 9,423 சாலை விபத்துக்களும், 2018ம் ஆண்டு 4,869 சாலை விபத்துக்களும் அரங்கேறியிருந்தன. அதை தொடர்ந்து வந்த 2019ம் ஆண்டு 4,775 சாலை விபத்துக்கள் நடைபெற்றிருந்தன. அதே சமயம் கடந்த 2020ம் ஆண்டு 3,564 சாலை விபத்துக்களுக்கு குண்டும், குழியுமான சாலைகள் காரணமாக இருந்துள்ளன.

இந்தியாவில் மோசமான சாலைகள் காரணமாக நடைபெறும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதை இந்த புள்ளி விபரங்களின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் தற்போது சாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசு மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உலகிலேயே சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா முதன்மையானதாக உள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கையை பெரும் அளவிற்கு குறைக்க வேண்டும் என்பதுதான் ஒன்றிய அரசின் லட்சியமாக உள்ளது.

பொதுவாக சாலை விபத்துக்களுக்கான காரணங்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம். ஓட்டுனர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது, வாகனங்களில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் சாலைகளின் தரம் மோசமாக இருப்பது ஆகியவைதான் அந்த மூன்று வகைகள். இதில், ஓட்டுனர்கள் தவறு செய்வதை தடுப்பதற்காக போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை ஒன்றிய அரசு மிக கடுமையாக உயர்த்தியது.

மோட்டார் வாகன சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் அபராத தொகைகள் உயர்த்தப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக ஒன்றிய அரசு பிடிவாதமாக இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதற்கு அடுத்தபடியாக வாகனங்களில் பாதுகாப்பு வசதிகளையும் ஒன்றிய அரசு மேம்படுத்தி வருகிறது.

ஏபிஎஸ், ஏர்பேக் போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகள் வாகனங்களில் கட்டாயமாக இடம்பெற தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடர்ச்சியாக எடுத்து கொண்டுள்ளது. இந்த வரிசையில் சாலை விபத்துக்களுக்கு சாலைகளும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதால், சாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக நெடுஞ்சாலைகள் அதிகபட்ச தரத்தில் அமைக்கப்படுவதை தற்போது நம்மால் காண முடிகிறது. அமெரிக்காவிற்கு இணையாக இந்தியாவின் நெடுஞ்சாலைகளையும் தரம் உயர்த்த வேண்டும் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வரும் ஆண்டுகளில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை இன்னும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








