அதல பாதாளத்தில் மாருதி சுஸுகி, ஹூண்டாய்... தனி ஆளாக கெத்து காட்டிய டாடா... சம்பவம் பண்ணீட்டாங்க!
இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி பலேனோ முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 19,433 பலேனோ கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 8,077 ஆக குறைந்துள்ளது.

இது 58 சதவீத வீழ்ச்சியாகும். என்றாலும் கூட இந்த செக்மெண்ட்டில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி பலேனோ பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை டாடா அல்ட்ராஸ் பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5,952 ஆக இருந்த அல்ட்ராஸ் காரின் விற்பனை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 5,772 ஆக குறைந்துள்ளது.

இது 3 சதவீத வீழ்ச்சியாகும். இது சிறிய அளவிலான வீழ்ச்சிதான் என்பதால் வரும் மாதங்களில் டாடா அல்ட்ராஸ் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு அக்டோபர் மற்றும் அடுத்த நவம்பர் மாதங்கள் பண்டிகை காலம் என்பதால், டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ள 4 'மேட் இன் இந்தியா' கார்களில் டாடா அல்ட்ராஸ் காரும் ஒன்று (மற்றவை டாடா பன்ச், டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300). இந்த சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங் காரணமாக டாடா அல்ட்ராஸ் காருக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த பட்டியலில் ஹூண்டாய் ஐ20 கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 9,852 ஐ20 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வெறும் 5,153 ஆக குறைந்துள்ளது. இது 48 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் டொயோட்டா க்ளான்சா கார் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2,572 ஆக இருந்த டொயோட்டா க்ளான்சா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 1,764 ஆக குறைந்துள்ளது. இது 31 சதவீத வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி பலேனோவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா க்ளான்சா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் கூட்டணி அடிப்படையில் மாருதி சுஸுகி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு க்ளான்சா என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது. வரும் காலங்களில் இன்னும் பல்வேறு மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் டொயோட்டா பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்யப்படவுள்ளன.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை ஃபோக்ஸ்வேகன் போலோ பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1,585 ஆக இருந்த ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 799 ஆக குறைந்துள்ளது. இது 50 சதவீத வீழ்ச்சியாகும். அதாவது ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் விற்பனை சரிபாதியாக சரிந்துள்ளது.

இந்த பட்டியலில் ஆறாவது மற்றும் கடைசி இடத்தை ஹோண்டா ஜாஸ் கார் பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் 748 ஜாஸ் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 667 ஆக குறைந்துள்ளது. இது 11 சதவீத வீழ்ச்சியாகும். இந்த செக்மெண்ட்டில் கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து கார்களுமே வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

டாடா அல்ட்ராஸ் தவிர மற்ற அனைத்து கார்களும் இரட்டை இலக்கத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஆனால் டாடா அல்ட்ராஸ் கார் ஓரளவிற்கு பரவாயில்லை என்னும் அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது பண்டிகை காலம் என்பதால், கார் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உற்பத்தி தொடர்பான பிரச்னைகளை சந்தித்து வருவது கார் நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது.

செமி கண்டக்டர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் தற்போது கார் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் கார் நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. முன்பதிவுகள் குவியும் நிலையில் கார் நிறுவனங்களால் உரிய அளவில் டெலிவரி செய்ய முடியவில்லை. இந்த பிரச்னை நீண்ட கால அளவில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








