"அவரு போன தடவையே வேணாம்னு சொன்னாரு" -மீண்டும் 10 கோடி ரூபா காரை வாங்கும் திட்டத்தை கையில் எடுத்த ஒன்றிய அரசு!
குடியரசு தலைவர் கடந்த முறை வேண்டாம் என கூறிய பத்து கோடி ரூபா காரை வாங்கும் திட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் கையிலெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் பாதுகாப்பான பயணத்திற்காக கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 புல்மேன் குவார்ட் சொகுசு மற்றும் அதிக பாதுகாப்பு நிறைந்த கார் வாங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு கொரோனா வைரஸ் பரவல் முற்றி புள்ளி வைத்தது.

திடீர் தாக்குதலை போல் கொரோனா இந்தியாவை தாக்க தொடங்கியதால் நாடு திக்க முக்காட செய்தது. முழு முடக்கம் மற்றும் அதிக பாதிப்புகளின் காரணத்தினால் நாட்டின் பொருளாதாரம் மிகக் கடுமையாக சரிந்தது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டே குடியரசு தலைவர் இப்போதைக்கு புதிய கார் கொள்முதல் வேண்டாம் என கூறி அதற்கு முற்று புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் குடியரசு தலைவரின் பாதுகாப்பு பிரிவு மீண்டும் அக்காரை வாங்கும் திட்டத்தைக் கையிலெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமாங்க, மிக அதிக விலைக் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 புல்மேன் குவார்ட் காரை வாங்க ஒன்றிய திட்டமிட்டிருக்கின்றது.

இதனையே கடந்த ஜனவரி மாதம் 2021லேயே ஒன்றிய அரசு வாங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆகஸ்டு 15ம் தேதி அன்று வாங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வரை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் பாதுகாப்பான பயணத்திற்கு மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ் 600 புல்மேன் குவார்ட் கார் கார் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இது டபிள்யூ221 அடிப்படையிலான ஓர் பாதுகாப்பான வாகனம் ஆகும். இந்த காரை மெர்சிடிஸ் நிறுவனம் 2011ம் ஆண்டிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்தது. முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி அவர்களின் பயன்பாட்டிற்காக அப்போது இந்த கார் வாங்கப்பட்டது.

இந்த கார் இன்னும் பாதுகாப்பான ஓர் வாகனமாகவே தென்பட்டாலும் அரசு இதனை மாற்றும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. இதனடிப்படையிலேயே ஏற்கனவே புதிதாக மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 குவார்ட் காரின் ஓர் யூனிட்டை டெல்லிக்கு வரவைத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, காரில் கூடுதலாக பாதுகாப்பு வசதிகள் சேர்ப்பதற்காக எஸ்பிஜி நிறுவனத்தின் வசம் அந்த வாகனம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்600 புல்மேன் குவார்ட் கார் ஆறு மீட்டர் நீளம் கொண்டது.

தற்போது சாலையில் இருக்கும் கார்களைக் காட்டிலும் மிக அதிக நீளமானது. இந்த காரை நீங்கள் வாங்க வேண்டுமானால் குறைந்தது 1.5 வருடங்கள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். ஆம், இந்த காரை உருவாக்க பென்ஸ் இவ்ளோ நீண்ட நாட்களையே எடுத்துக் கொள்கின்றது.

ஆகையால், குடியரசு தலைவரின் பயன்பாட்டிற்காக இந்த கார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையிலேயே அது தற்போது இந்தியா வந்திறங்கியிருக்கின்றது. இந்த வாகனம் விஆர்9 எனப்படும் மிக அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட வாகனம் ஆகும்.

மிக தெளிவாக கூற வேண்டுமானால் துப்பாக்கி அல்லது குண்டு மழையே பொழிந்தாலும் கூட காருக்குள் இருப்பவர்களுக்கு சிறு துளி கீரல்கூட ஏற்படாது. அந்தளவிற்கு அதிக பாதுகாப்பு நிறைந்ததே குடியரசு தலைவரின் பயன்பாட்டிற்காக விரைவில் களமிறக்கப்பட இருப்பதாகக் கூறப்படும் மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் குவார்ட் கார்.

காரின் சேஸிஸ், உடல் பேனல் மற்றும் கண்ணாடி ஆகிய அனைத்தும் மிகவும் உறுதியானவை. எத்தனை எம்எம் தோட்டாவாக இருந்தாலும் இதனை துளைக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. இத்தகைய காரிலேயே மிக விரைவில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தனது பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றார்.

இந்த வாகனத்தில் ட்வின் டர்போ வி12 எஞ்ஜின் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 523 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க்கை வெளியற்றும் திறன் கொண்டது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ ஆகும். இதன் கதவுகள் அனைத்தும் எலக்ட்ரானிக்கல் கட்டுப்படுத்தும் வசதிகள் கொண்டவை.

இத்துடன் குளிர்சாதன பெட்டி வசதி, பானத்தை சூடாக அல்லது குளிர்ச்சியாக வைத்திருக்கும் கோப்பை தாங்கிகள், பொழுதுபோக்கு திரை உள்ளிட்டவை இந்த வாகனத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த வாகனத்தின் விலை ரூ. 10 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்த உச்சபட்ச விலையைக் கருத்தில் கொண்டே கடந்த காலத்தில் இந்த காரின் கொள்முதலை குடியரசு தள்ளி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








