டொயோட்டா கார்களை வாங்க, பணத்திற்கு பதிலா சோளம்!! பிரேசில் விவசாயிங்க கொடுத்து வெச்சவங்க
டொயோட்டா கரோல்லா அல்லது ஃபார்ச்சூனர் காரை வாங்க சோளம் அல்லது சோயாபீன்ஸை பணமாக செலுத்தும் முறை தென் அமெரிக்க நாடு ஒன்றில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த நாடு எது? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலினை இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகை சுற்றிலும் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயங்கள் அவ்வப்போது நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. அதிலிலும் ஆட்டோமொபைல் துறையில் நடைபெறக்கூடியவை எப்போதுமே நமக்கு தனி சுவாரஸ்யத்தை வழங்கக்கூடியவை.

அத்தகைய சுவாரஸ்யமான விஷயமாக, டொயோட்டா தனது காரை வாங்கும் வாடிக்கையாளரிடம் இருந்து பணத்திற்கு மாற்றாக சோளம் அல்லது சோயாபீன்ஸை வாங்க துவங்கி இருக்கின்றது. இந்தியாவிலா என ஆச்சிரியப்பட வேண்டாம். இந்த பண்ட மாற்று முறை பிரேசிலில் கொண்டுவரப்பட்டுள்ளது.

தனது வாகனங்களுக்கான பணமாக, பண்ட மாற்று முறையில் சோளம் அல்லது சோயாபீன்ஸை வாங்க முடிவு செய்திருக்கும் உலகின் முதல் ஆட்டோமொபைல் நிறுவனம், எங்களுக்கு தெரிந்தவரையில் ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டொயோட்டா தான்.

லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் வேளாண் துறையில் ஈடுப்பட்டு வருவோரை கவர்வதற்காக டொயோட்டா இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பிரேசிலில் டொயோட்டாவின் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 16 சதவீதம் அதன் வேளாண் வணிக துறை தான் பங்களிக்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய பண்டமாற்று முறை இந்த சதவீதத்தை மேலும் அதிகரிக்க உதவும் என டொயோட்டா நம்பிக்கை கொண்டுள்ளது. வேளாண் துறையை சேர்ந்த வாடிக்கையாளர்களை தவிர்த்து பிரேசிலில் உள்ள மற்ற வாடிக்கையாளர்களுக்கு மேற்கூறப்பட்ட டொயோட்டா கார்கள் வழக்கம்போல் பணத்திற்காகவே விற்பனை செய்யப்பட உள்ளன.

"டொயோட்டா பண்டமாற்று" என அழைக்கப்படும் இந்த திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் அவர்கள் வாங்கும் புதிய கார்களுக்கான பணத்தை சோளம் அல்லது சோயாபீன்ஸின் மூலமாக தரலாம் எனவும், வாகனத்தின் விலைக்கு ஏற்ப சோளமும், சோயாபீன்ஸும் எடை போடப்படும் எனவும் டொயோட்டா பிரேசில் நிறுவனம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

காரின் மதிப்பிற்கு ஏற்ப சோளம் அல்லது சோயாபீன்ஸ் பெற்று கொள்ளப்பட்ட பிறகே கார் அதன் உரிமையாளருக்கு இந்த நாட்டில் டெலிவிரி செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தில் டொயோட்டா ஹில்லுக்ஸ் பிக்அப் ட்ரக், கரோல்லா க்ராஸ் எஸ்யூவி அல்லது எஸ்.டபிள்யூ4 எஸ்வி காரை வாடிக்கையாளர் வாங்கலாம்.

இதில் எஸ்.டபிள்யூ4 எஸ்வி என்பது நம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பிரபலமான ஃபார்ச்சூனர் காராகும். பிரேசிலில் இவ்வாறான பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய ‘டொயோட்டா பண்டமாற்று' திட்டத்தில் இந்த கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவரது விபரங்களும் ஆராயப்படுமாம்.

அதாவது வாடிக்கையாளர் கிராமம் அல்லது சிறிய நகர பகுதியில் வசித்து கொண்டு வேளாண் துறையில் ஈடுப்பட்டு வருகிறாரா என்பது டொயோட்டா டீலர்களால் உறுதி செய்து கொள்ளப்படும். தற்போதைக்கு இந்த திட்டம் பிரேசிலின் சில மாநிலங்களில் மட்டுமே அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பிரேசில் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்தும் பணியில் டொயோட்டா இறங்கவுள்ளது. சோளம் மற்றும் சோயாபீன்ஸை பண்டமாற்று முறையில் மாற்றி கொள்வதுதான் டொயோட்டாவிற்கு புதியதே தவிர்த்து, பண்டமாற்று முறை ஒன்றும் புதியது அல்ல.

முன்னதாக கடந்த 2019ல் இதேபோன்று பைலட் திட்டம் என்ற ஒன்றை இந்த ஜப்பானிய கார் பிராண்ட் அறிமுகப்படுத்தி இருந்தது. சோளம் மற்றும் சோயாபீன்ஸை வாங்கும் திட்டத்தை எதற்காக டொயோட்டா நிறுவனம் கையில் எடுத்துள்ளது என்பதற்கான பதில் இல்லை.

இதனால் பிரேசில் நாட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து டன் கணக்கில் பெறப்பட உள்ள சோளம் மற்றும் சோயாபீன்ஸ் எங்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன என்பதும் தெரியவில்லை. பிரேசிலில் இருந்து ஏற்றுமதி செய்து மற்ற நாடுகளில் டொயோட்டா விற்பனை செய்யலாம். அல்லது இவற்றின் மூலமாக எரிவாயுவை தயாரிக்கும் திட்டம் ஏதாவது இந்த நிறுவனத்திடம் இருக்கலாம். யாருக்கு தெரியும்.


Click it and Unblock the Notifications








