அடுத்த வருஷத்துல இருந்து புதிய ரெனோ கார்கள் வாங்கினா இனி இந்த வேகத்திற்கு மேல் செல்லாது... காரணம் இதுதான்!
சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக, உலக அளவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களின் அதிகபட்ச வேகம் குறித்து முக்கிய முடிவை ரெனோ கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்கான தீர்வுகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி, கார்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க முடிவு செய்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இந்த முடிவை ரெனோ கார் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இதன்படி, ரெனோ மற்றும் டேஸியா பிராண்டுகளில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, சாலையில் உள்ள போக்குவரத்து நிலவரம் மற்றும் அபாயங்கள் குறித்த தரவுகளை சேகரித்து ஓட்டுனர்களை எச்சரிக்கும் புதிய முறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதனால், அபாயகரமான பகுதிகளை ஓட்டுனர்கள் முன்கூட்டியே தெரிந்து கொண்டு பாதுகாப்பாக இயக்க முடியும். இந்த எச்சரிக்கை நுட்பத்திற்கு சேஃப்டி கோச் என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, சேஃப் கார்டியன் என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக வளைவுகளில் அதிவேகமாக திரும்பும்போதும் அல்லது இதர காரணங்களால் கார் கட்டுப்பாட்டை இழக்கும் நிலையையும் தவிர்க்கும். சென்சார்கள் மற்றும் இதர மின்னணு சாதனங்கள் மூலமாக நிகழ்நேர முறையில் கிடைக்கும் தரவுகளின்படி, இந்த தொழில்நுட்பம் விபத்துக்களை தவிர்க்க உறுதுணையாக இருக்கும்.

அதேபோன்று, வரும் 2022ம் ஆண்டு முதல் உலக அளவில் விற்பனை செய்யப்படும் தனது கார்களின் அதிகபட்ச வேகத்தை மணிக்கு 180 கிமீ என்ற அளவில் நிர்ணயிக்கவும் முடிவு செய்துள்ளது. வால்வோ கார் நிறுவனத்தை தொடர்ந்து இந்த மிக முக்கிய முடிவை ரெனோ கார் நிறுவனம் எடுத்துள்ளது.

மேலும், தனது கார்களில் விசேஷ QR code வழங்கப்படும் என்று ரெனோ தெரிவித்துள்ளது. ஒருவேளை கார் விபத்தில் சிக்கும்போது, மீட்புப் படையினர், காரின் கட்டுமானம் மற்றும் திறப்பதற்கான வழிமுறைகளை எளிதாக தெரிந்து கொள்வதற்கு இது உதவும். இதனால், உள்ளே சிக்கி இருக்கும் பயணிகளை விரைவாக மீட்க ஏதுவாகும்.

இதுதவிர்த்து, வரும் 2050ம் ஆண்டுக்குள் மாசு உமிழ்வு இல்லாத வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளது. ஐரோப்பாவில் 2040ம் ஆண்டுக்குல் மாசு உமிழ்வு இல்லாத வாகனங்களை விற்பனை செய்யவும் இலக்கு வைத்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் தனது கார் ஆலைகளில் இருந்து மாசு உமிழ்வு அளவை 50 சதவீதமாக குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக, பெரும் முதலீட்டு திட்டத்தையும் செயல்படுத்த உள்ளது.


Click it and Unblock the Notifications








