புதுச்சேரியில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் திறப்பு!
புதுச்சேரியில், ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் மற்றும் சர்வீஸ் மையம் திறக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பெறுவதற்காக வரிந்து கட்டி களமிறங்கி உள்ளது. புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் பல புதிய கார் மாடல்களை களமிறக்கவும், வர்த்தக விரிவாக்கப் பணிகளை சிறப்பாக செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது.

புதிய கார் மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வரும் அதேநேரத்தில், டீலர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.

கார் விற்பனை, சர்வீஸ் மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை வழங்கும் வகையில் இந்த புதிய ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. கேயூஎன் மோட்டார்ஸ் நிறுவனம்தான் இந்த புதிய ஷோரூமை அமைத்துள்ளது.

புதுச்சேரி - கடலூர் இடையிலான இசிஆர் சாலையில் மணவெளி ரோடு, அரியாங்குப்பம் என்ற முகவரியில் இந்த புதிய ஷோரூம் அமைந்துள்ளது. இந்த புதிய கார் ஷோரூம் 3,000 சதுர அடி பரப்பு கொண்டதாக இருக்கிறது. 4 கார்களை பார்வைக்கு நிறுத்துவதற்கான வசதியை பெற்றுள்ளது.

மேலும், ஸ்கோடா நிறுவனத்தின் கார் சர்வீஸ் மையம் இசிஆர் சாலையில் கோட்டுப்பாளையத்தில் உள்ள அமுதசுரபி பெட்ரோல் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இந்த கார் சர்வீஸ் மையம் 11,000 சதுர அடி பரப்பு கொண்டதாக இருக்கிறது. 6 கார்களை சர்வீஸ் செய்வதற்கான சர்வீஸ் பே வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு 800 கார்கள் வரை சர்வீஸ் செய்ய முடியும்.

இந்த புதிய ஷோரூம் திறப்பு குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் கூறுகையில்,"புராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் வரும் புதிய கார்களுக்காக எங்களது டீலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான, சிறந்த சேவையை வழங்குவதற்கு இது உறுதுணையாக இருக்கும்.

எங்களது வர்த்தகத்தில் தென் இந்தியா மிக முக்கியமான சந்தையாக உள்ளதால், அதிக முக்கியத்துவம் கெடுத்து வருகிறோம். புதுச்சேரியில் முதல் டீலர்ஷிப்பை திறந்துள்ளது மகிழ்ச்சி தருவதுடன், எங்களது வர்த்தகத்தில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும்," என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் மிக விரைவில் குஷாக் என்ற புத்தம் புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் கொண்டு வர இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும். அத்துடன், சப்-காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் ரேபிட் செடான் காருக்கு மாற்றாக புதிய செடான் கார் மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








