ஸ்கோடா கரோக் எஸ்யூவி அறிமுகம் குறித்து ஒரு ஏமாற்றமான தகவல்
கரோக் எஸ்யூவியை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் குறித்து ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஸாக் ஹொல்லிஸ் தெரிவித்துள்ளார். இது இந்திய வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஸ்கோடா கரோக் எஸ்யூவி உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் பிரிமீயம் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்தது.

இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டதால், விலை அதிகம் இருந்தாலும் கூடுதல் மதிப்புடன் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றது. முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட்ட கரோக் எஸ்யூவியின் 1,000 யூனிட்டுகளும் கடந்த ஜனவரி மாதத்துடன் விற்பனை முடிந்துவிட்டது.

இந்த நிலையில், கரோக் எஸ்யூவியை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்வதற்கு ஸ்கோடா திட்டமிட்டது. ஆனால், தற்போது குஷாக் எஸ்யூவி உற்பத்தி மற்றும் விற்பனையில் அதிகம் கவனம் செலுத்தப்படுவதால், கரோக் எஸ்யூவி விற்பனையை ஸ்கோடா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

கரோக் எஸ்யூவி மீண்டும் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கோடா முடிவு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில், கரோக் எஸ்யூவி குறித்து சமூக வலைதளத்தில் ஸ்கோடா கார் பிரியர் ஒருவர் வினா எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஸாக் ஹொல்லிஸ், " தற்போது கரோக் எஸ்யூவியை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் இல்லை என்று கூறி இருக்கிறார்.

இந்த நிலையில், வரும் 30ந் தேதி புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மாடல் வர இருக்கிறது. அண்மையில் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், புதிய கரோக் எஸ்யூவி அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

டாப் வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், கருப்பு வண்ண டிஃபியூசர், புதிய ஸ்பாய்லர் போன்ற பல மாற்றங்கள் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. வரும் ஜனவரியில் இந்தியாய வர இருக்கும் புதிய கோடியாக் எஸ்யூவியின் டிசைன் அம்சங்களும் கொடுக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், புதிய கரோக் எஸ்யூவியை உலக அளவில் ஸ்கோடா நிறுவனம் வெளியிட உள்ள நிலையில், அது நிச்சயம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஸாக் ஹொல்லிஸ் கொடுத்துள்ள புதிய தகவல் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனினும், அடுத்த ஆண்டு பிற்பாதியில் கரோக் எஸ்யூவியை மீண்டும் இந்தியாவில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து ஸ்கோடா நிறுவனம் ஆராய்ந்து முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். அப்படி வந்தால், 5 சீட்டர் பிரிமீயம் எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்படும். சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிக்கு நேர் போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








