வேற லெவல்... விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஸ்கோடா... காரணம் என்னனு தெரியுமா?
ஸ்கோடா இந்தியா நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 234 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக ஸ்கோடா இந்தியா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 922 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 3,080 கார்களாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நடப்பாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிட்டாலும் ஸ்கோடா இந்தியா நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியைதான் சந்தித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் ஸ்கோடா நிறுவனம் 734 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

எனவே ஜூலை மாதம் ஸ்கோடா இந்தியா நிறுவன கார்களின் விற்பனை 320 சதவீதம் உயர்ந்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் இப்படி சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருப்பதற்கு குஷாக் எஸ்யூவிதான் மிக முக்கியமான காரணம். ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் கடந்த ஜூன் மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் 1.0 லிட்டர் வேரியண்ட்களின் டெலிவரி பணிகள் கடந்த ஜூலை மாத மத்தியில் தொடங்கின. விற்பனைக்கு வந்த ஒரு மாத காலத்திற்கு உள்ளாகவே ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காருக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. நாங்கள் ஏற்கனவே கூறியபடி 1.0 லிட்டர் மாடலின் டெலிவரி பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.

அதே சமயம் 1.5 லிட்டர் மாடலின் டெலிவரி பணிகள் நடப்பு மாதம் தொடங்கப்படவுள்ளன. ஸ்கோடா நிறுவனத்திடம் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் ஒரு குறை போதிய அளவில் டீலர்ஷிப்கள் இல்லாததுதான். ஆனால் இந்த குறையை சரி செய்யும் பணிகளை ஸ்கோடா இந்தியா நிறுவனம் தொடங்கி விட்டது.

அத்துடன் ஸ்கோடா டீலர்ஷிப்களை திறப்பதற்கு பலர் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே வரும் காலங்களில் இந்தியாவில் ஸ்கோடா டீலர்ஷிப்களின் எண்ணிக்கை வெகுவாக உயரவுள்ளது. இதன் காரணமாக ஸ்கோடா இந்தியா நிறுவன கார்களின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

கடந்த 108 மாதங்களில் (9 வருடங்கள்) ஸ்கோடா இந்தியா நிறுவனம் 3,000க்கும் மேற்பட்ட விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யவில்லை. ஆனால் 108 மாதங்களுக்கு பிறகு, அதாவது 9 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தற்போது விற்பனை எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. இது ஸ்கோடா நிறுவனத்திற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் பதிவு செய்யப்பட்டது. இதற்கு காரணம் ஸ்கோடா ரேபிட் ஆகும். அந்த மாதத்தில் மட்டும் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் 3,246 ரேபிட் கார்களை விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








