ரேபிட் காரை ஓரங்கட்டுகிறதா ஸ்கோடா? புத்தம் புதிய செடான் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாம்!!
ஸ்கோடாவின் புதிய சி-பிரிவு செடான் கார் இந்தியாவில் இந்த 2021ஆம் ஆண்டிற்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதை நிறுவனத்தின் சிஇஒ தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் தற்போதைக்கு ஸ்கோடாவின் ஒரே ஒரு செடான் காராக ரேபிட் கடந்த 2011ல் இருந்து விற்பனையில் உள்ளது. அப்போதில் இருந்து இடையில் ஒரு முறை மட்டுமே ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை இந்த செடான் கார் பெற்றது.

இதனால் இதன் விற்பனை இந்திய சந்தையில் பெரிய அளவில் இல்லாத நிலையில், முன்னதாக ரேபிட்டின் புதிய தலைமுறை காரின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இதன் அறிமுகத்தை வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது, முற்றிலும் புதிய செடான் காரை இந்த வருட இறுதியில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், ஸ்கோடாவின் லைன்அப்பில் தற்போதைய ரேபிட்டிற்கு மேலே நிலைநிறுத்தப்படவுள்ள இந்த புதிய கார் தோற்றத்தில் சற்று பெரியதாக இருக்கும் எனவும், ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் சிஇஒ ஜாக் ஹோலிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய ரேபிட்டின் அறிமுகத்தை எப்போது எதிர்பார்க்கலாம் என நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார். மிக விரைவில் ஸ்கோடா பிராண்டில் இருந்து அறிமுகமாகவுள்ள குஷாக் எஸ்யூவி காரின் எம்க்யூபி ஏ0 இந்தியா ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி இந்த புதிய செடான் கார் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

புதிய செடானின் வருகை வரையில் தற்போதைய பிஎஸ்6 ராபிட் விற்பனையில் இருக்கும். அதன்பின்னரும் ராபிட்டின் விற்பனை தொடரப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால் தற்போதைய ராபிட்டை காட்டிலும், தொழிற்நுட்ப வசதிகளில் புதிய செடான் கார் பல படிகள் முன்னோக்கி இருக்கும் என்பது மட்டும் உறுதி.

இந்த வகையில் முழு எல்இடி விளக்குகள், முழுவதும் டிஜிட்டல் தரத்தில் ‘விர்டியுவல் காக்பிட்' இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கேபினை சுற்றிலும் விளக்குகள், ஸ்மார்ட் ப்ளே இணைப்பு & இணைப்பு-கார் தொழிற்நுட்பத்துடன் பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை புதிய செடானில் எதிர்பார்க்கலாம்.

தற்போதைய ரேபிட் செடானில் ஒரே ஒரு 1.0 லிட்டர், 3-சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை மட்டும் தான் ஸ்கோடா நிறுவனம் வழங்குகிறது. 110 பிஎஸ் மற்றும் 175 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படும் இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

இதே டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் புதிய செடான் காரிலும் எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் டாப் வேரியண்ட்களில் பெரிய 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டிஎஸ்ஐ என்ஜினையும் எதிர்பார்க்கலாம். அதேபோல் வழக்கமான ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications








