ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை உறுதியானது!
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை உறுதியாகி இருக்கிறது. இந்த மாடல் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது உள்ளிட்ட தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் குறிப்பிடத்தக்க சந்தை பங்களிப்பை பெற்றுவிட வேண்டும் என்ற துடிப்புடன் வேலை பார்த்து வருகிறது. அந்த வகையில், பல புதிய மாடல்களை வரிசை கட்ட திட்டமிட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் குஷாக் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கும் ஸ்கோடா நிறுவனம் அடுத்ததாக, கோடியாக் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, கோடியாக் எஸ்யூவி விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் இந்தியாவில் பிஎஸ்-6 மாடலாக வர இருக்கிறது.
அதாவது, நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டு காலத்தில் புதிய கோடியாக் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஸ்கோடா இந்தியா தலைவர் ஸாக் ஹொல்லிஸ் தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தையொட்டி, இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இது ஃபேஸ்லிஃப்ட் மாடல் என்பதால், வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சில மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வர இருக்கிறது. வெளிப்புறத்தில் பம்பர் அமைப்பில் சிறிய வடிவமைப்பு மாறுதல் செய்யப்பட்டு இருக்கும். புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்படும்.
உட்புறத்திலும் சில மாற்றங்கள் இடம்பெற்றிருக்கம். குஷாக் எஸ்யூவியில் இருப்பது போலவே, இந்த புதிய மாடலிலும் 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் வழங்கப்படும் என்று தெரிகிறது. மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படும்.

கோடியாக் பிஎஸ்-4 மாடலில் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். மேலும், இது டீசல் எஞ்சினைவிட சக்திவாய்ந்ததாக இருக்கும். ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் அதே எஞ்சின்தான் இதிலும் இடம்பெறும்.
இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெறும்.
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ரூ.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இது ஃபுல்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும்.


Click it and Unblock the Notifications








