2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரில் வழங்கப்படவுள்ள என்ஜின் தேர்வுகள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியா 2.0 திட்டத்தின்படி ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக புதிய குஷாக் எஸ்யூவி கார் வெளிவரவுள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் விஷன் இன் என்ற பெயரில் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்ட குஷாக் எஸ்யூவி காரின் அறிமுகம் விரைவில் இருக்கும் என ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் அவ்வப்போது உறுதிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் குஷாக் எஸ்யூவி காரில் வழங்கப்படவுள்ள என்ஜின் தேர்வுகள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. குஷாக் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டிஎஸ்ஐ என்ற இரு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் வழங்கப்படவுள்ளது.

இந்த என்ஜின்கள் காருக்கு வழங்கும் ஆற்றல் அளவுகள் குறித்த எந்த விபரமும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. நமக்கு தெரிந்தவரை 1.0 லிட்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎஸ் பவரையும், 1.5 லிட்டர் என்ஜின் 150 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும். 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினிற்கு கூடுதல் தேர்வாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், 1.5 லிட்டர் என்ஜின் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸும் வழங்கப்படலாம்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் இணைந்து ஸ்கோடா நிறுவனம் குஷாக் எஸ்யூவி காரை தயாரித்து வருகிறது. இந்தியா 2.0 திட்டத்தில் இருந்து வரும் ஆண்டுகளில் இரு நிறுவனங்களில் இருந்தும் தயாரிப்புகள் வெளிவரவுள்ளன.

குஷாக் எஸ்யூவி காரின் அறிமுகத்தை தொடர்ந்து அடுத்த சில வாரங்களில் ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து டைகுன் எஸ்யூவி கார் வெளிவரவுள்ளது. குஷாக்கிற்கு அடுத்து ஸ்கோடா நிறுவனம் வரிசையாக புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.


Click it and Unblock the Notifications








